மதுரை:”மகரிஷிகளே நமக்கு நல்வழிகாட்டும் மார்க்க தரிசிகளாக உள்ளனர்” என சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
மதுரை சின்மயா மிஷன் சார்பில் ’அஷ்டாவக்ர மகரிஷி சரித்திரம்’ சொற்பொழிவில் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது:சரஸ்வதி பூஜையன்று வேத, புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் நல்லறிவூட்டும் புத்தகங்களை வைத்து வணங்குகிறோம். நமக்கு இத்தனை அறிவை யும், ஞானத்தையும் பெற்று தந்தவர்கள் குன்றாத தவத்தையும், அழிவற்ற ஞானத்தையும் பெற்ற மகரிஷிகள் தான்.
ரிஷிகளின் சரித்திரங்கள் சுவாரஸ்யமாக, தர்ம வழிகளை காட்டும் போதனைகளாகவும் இருக்கும். ரிஷிகள் எப்போதும் உலக நன்மைக்காகவே தவம் இருந்தனர். மனிதர்களின் அறியாமையை போக்கவே பூமியில் அவதரித்தனர். ரிஷிகளை நினைவு கூர்ந்தாலே மனதில் புத்துணர்ச்சியும், அறிவில் தெளிவும் ஏற்படும். பண்டைக்கால பாரதத்தின் உயர் பண்புகளும், பெருமைகளும் நன்கு விளங்கும், என்றார்.