பதிவு செய்த நாள்
10
அக்
2019
11:10
திருநெல்வேலி : பாளையங்கோட்டை தசரா திருவிழாவை ஒட்டி, 12 அம்மன்களின் சப்பர பவனி கோலாகலமாக நடந்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், தசரா விழா, செப்., 29ல், ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மற்ற அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை துவங்கியது. ஒன்பது நாட்களும், அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பத்தாவது திருநாளான நேற்று முன்தினம் இரவில், அனைத்து அம்மன் கோவில்களில் இருந்தும், 12 சப்பரங்கள், நள்ளிரவில் வீதியுலா வந்தன. நேற்று காலை, ராமசாமி கோவில் திடலில், இந்த சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலையில், 12 சப்பரங்களும், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில், பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் மாரியம்மன் கோவில் திடலில், சூரசம்ஹாரம் நடந்தது.