பதிவு செய்த நாள்
10
அக்
2019
11:10
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது. திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா, செப்., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நவராத்திரி நாட்களில், உற்சவ தாயார், தபசு, பராசக்தி, நந்தினி, பத்மாவதி, கவுரி, ராஜராஜேஸ்வரி, உமா மகேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.
கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, சந்திரசேகரர் – திரிபுர சுந்தரி தாயார், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா வந்து, அப்பர் சாமி கோவில் தெரு, விநாயகர் கோவில் முன், வாழை மரத்தை வெட்டும், பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளிய தியாகராஜர், வசந்த தீர்த்த குளம் சுற்றியும், வடிவுடையம்மன் சன்னிதி எதிராகவும், திருநடனம் புரிந்ததுடன், மாடவீதி புறப்பாடாகினார். மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ தாயார், மாடவீதி உலா வந்து, கோவில் வளாக கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின், கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுற்றது. அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலிலும், நவராத்திரி திருவிழா, கடைசி நாளில், உற்சவ தாயார், புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னியம்மன் கோவில், நவராத்திரி கடைசி நாளில், உற்சவ தாயார், பரிவேட்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.