பதிவு செய்த நாள்
10
அக்
2019
12:10
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில், அம்பு எய்தல் விழா மற்றும் தீமிதி விழா நடந்தது. இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழா, இளையான்குடி ஆயிர வைசிய சபையினரால் நடைபெற்றது. செப்.29 முதல் தினமும் ராஜாங்க சேவை, காமாட்சி அம்மன் சேவை, உக்கிரபாண்டியன் சிறப்பு, அன்னபூரணி, அன்னை மீனாட்சி அம்மன், மகிஷாசுரமர்த்தினி, அன்னபூரணி, சரஸ்வதி, ஆகிய அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது.
விழாவையொட்டி மாணவர்களின் நடன நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, வீணை இன்னிசை நிகழ்ச்சி, கும்மிபாட்டு, நாட்டுப்புறப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, முக்கிய விழாவான அம்பு எய்தல் விழா நடைபெற்றது. இதில், அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தார். நேற்று காலை, பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்தனர். கோயிலின் முன்பு, பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அன்ன தானமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.