பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே ஏர்வாடி கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் நடத்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மல்லூர் அருகே ஏர்வாடியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, ஊர் தர்மகர்த்தா, ஊர் பெரியதனக்காரர்கள், காணியாசிகாரர் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக, குறிப்பிட்ட நாட்களில், திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இகு குறித்து இரு தரப்பினர், மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருவிழா நடத்தாமல் உள்ளது. குறிப்பிட்ட தேதியில் விழா நடத்த வேண்டும் என, ஏர்வாடி கிராம மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. நேற்று, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீ, ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த கோவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களை அழைத்து சமரசம் பேசினார். இதில், கருத்து வேறுபாடு இன்றி, ஏப்ரல் 11,12,13 ஆகிய நாட்களில் கோவில் திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.