பதிவு செய்த நாள்
10
அக்
2019
12:10
செங்கம்: செங்கம் அருகே, தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்தால், பாதுகாப்பு கருதி, சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு ?போலீசார் தடை விதித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில், சென்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு குலதெய்வ வழிபாட்டிற்கு ஏராளமானோர் வருகின்றனர். சுவாமி வழிபாட்டுக்கு முன், தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தற்போது கர்நாடகாவில் பெய்யும் மழையால், கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், தண்ணீர் திறந்து விடப்பட்டு, தென்பெண்ணை ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கி சென்னியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதித்துள்ளனர். பக்தர்கள் கரையிலிருந்து சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தி, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.