தேவகோட்டை: ஆயுத பூஜை அனைத்து கோவில்களிலும் நேற்று முன்தினம் 8ம் தேதி கொண்டாடப்பட்டது.
விஜயதசமியன்று போருக்கு சென்று வெற்றி பெற்று திரும்புதல் என்ற நிகழ்ச்சி நடப்பது மரபு. அதன்படி தேவகோட்டையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர், மும்முடிநாதர், கோதண்டராமர், கிருஷ்ணன், ஆகிய கோவில்களிலிருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனங்களில் சிவன் கோவில் கிழக்கு பகுதியில் மகர்நோன்பு திடலுக்கு வந்தனர்.
சுவாமிகள் மூன்று முறை சுற்றி வந்து வானத்தை நோக்கி சுவாமிகள் சார்பில் பூஜாரிகள் அம்பு விட்டனர். அம்பை எடுத்தால் நல்ல காரியங்கள் வீடுகளில் நடக்கும் என்பதால் அம்புகளை மக்கள் போட்டி போட்டு எடுத்தனர். தீபாராதனைக்கு பின் ஒவ்வொரு சுவாமியும் பிரியா விடை பெற்று சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.