பதிவு செய்த நாள்
09
ஏப்
2012
11:04
விருதுநகர் : இன்று அக்னிச்சட்டி: நாளை தேரோட்டம் தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக பக்தர்கள் அக்னிச்சட்டி எடுக்கும் விழா, இன்று கோலாகலமாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். கோயில் வரலாறு: விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் தற்போது கோயில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோயிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். 1918ல் கோயிலில், முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மண் சுவரால் ஆன கோயில் மூலஸ்தானத்திற்கு, 1923ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழாவை, வெகு விமரிசையாக கொண்டாட துவங்கினர். கோயிலின் முன்புறம் 1966ல் சிற்பங்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டது. அதன்பின், 1975ல் இருந்து 1980 வரை சிற்பங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி 1981ல் நிறைவடைந்தது.
பொங்கல் அறிவிப்பு: பொங்கல் திருவிழாவிற்கு, 21 நாட்களுக்கு முன்பு, தெப்பம் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தர்மம் விநாயகர் கோயிலில், அனைத்து சமுதாய பெரியோர்களையும் அழைத்து விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து காணிக்கைகாரர்கள் மூன்று பேரை, கோயிலுக்கு அழைத்து சென்று, கோயில் முன்பு தண்டோரா மூலம் பொங்கல் தேதியை அறிவித்தனர். தொடர்ந்து விருதுநகர் வீதிகள் தோறும் தண்டோரா போட்டு பொங்கல் தேதி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் சாட்டியதில் இருந்து 15வது நாள், கோயிலில் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் திருவிழா துவங்கிவிட்டது. பொங்கல் விழாவான நேற்று, கோயிலின் முன்பும், வீடுகளிலும் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.
அக்னிச்சட்டி: அக்னிச்சட்டி விழா இன்று நடக்கிறது. நகரில் இருந்தும், கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்தும், வாயில் சூலம் குத்தியும், கரகம், ரதம் இழுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இன்று அம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மண்டபத்தில் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.