பதிவு செய்த நாள்
14
அக்
2019
12:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில் நடந்த, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் உள்ளிட்ட, ஆன்மிக வகுப்பில் பங்கேற்று, முதல் பகுதியை முடித்த, மாணவ - மாணவியர், சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இளம் சிறார்கள் ஆன்மிக பக்தியுடன் நல்லொழுக்கங்களை கற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில், வடபழநி ஆண்டவர் கோவிலில், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பத்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, நான்கு பகுதிகளாக, ஓராண்டிற்கு, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ், நல்லொழுக்க சிந்தனைகள், சாஸ்திர -விஞ்ஞான பிணைப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஒரு வகுப்பில், 25 மாணவ - மாணவியருக்கு பயற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆன்மிக பயிற்சியின், முதல் பகுதி, மே மாதம் துவங்கி கடந்த, 30ம் தேதி நிறைவு பெற்றது. பயிற்சியை நிறைவு செய்த மாணவ - மாணவியருக்கு, வடபழநி ஆண்டவர் கோவில், தக்கார் எல்.ஆதிமூலம், சான்றிதழ்கள், பை, எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாணவ - மாணவியருக்கு, ஸ்லோகம் கற்றுக் கொடுத்த, ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், திருப்புகழ் ஆசிரியை, அருணாஸ்ரீ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பிள்ளைகள் ஆன்மிக சிந்தனை, நல்லொழுக்கத்துடன் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன், வகுப்புகளுக்கு அனுப்பிய பெற்றோரை கவுரவிக்கும் வகையில், பகவத்கீதை பரிசாக வழங்கப்பட்டது.
பயிற்சி வகுப்பு குறித்து, கோவில் தக்கார் ஆதிமூலம் கூறியதாவது:மாணவ - மாணவியர் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு, நல்லெண்ணமும், ஆன்மிக சிந்தனையும், இளம் வயதிலேயே விதைக்க வேண்டும். அதுவே, இந்த ஆன்மிக வகுப்புகளின் நோக்கம்.முதல், பேட்ச்ல் முதல் பகுதி முடித்தோருக்கு சான்றிதழ்கள் வங்கப்பட்டுள்ளன. இரண்டாவது, பேட்ச் விஜயதசமி அன்று துவக்கப்பட்டுள்ளது.ஆண்டிற்கு, 500 சிறார்களுக்கு ஆன்மிக வகுப்புகள் நடத்தி, நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார். பயற்சி முடித்து சான்றிதழ் பெற்ற சிறார்களின் பெற்றோர் கூறியதாவது:நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, விளையாட்டு, ஆன்மிக சிந்தனை ஆகியவை, இக்கால சிறார்களிடம் முடங்கி போயுள்ளது. அவர்களிடம் இயலாமை, சோர்வு காணப்படுகிறது.வடபழநி ஆண்டவர் கோவிலில், இதற்கு தீர்வாக, தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் உள்ளிட்ட வகுப்புகள் விளங்குகின்றன. கடந்த, மூன்று மாதங்களில், எங்கள் பிள்ளைகளிடம் நல்ல வித்தியாசம், சுறுசுறுப்பு காணப்படுகிறது. அவர்கள் அணுகுமுறையிலும் மாற்றம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.