பதிவு செய்த நாள்
14
அக்
2019
12:10
மணலிபுதுநகர்: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின், 10 நாள் திருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில் உற்சவர், காளை, அன்னம், மயில், மலர்முக சிம்மாசனம், காளை, கருடர், ஆஞ்சநேயர், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பதிவலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா திருத்தேரோட்டம், நேற்று மதியம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 36 அடி உயர, பிரமாண்ட தேரில், அய்யா வைகுண்ட தர்மபதி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அமைச்சர், பாண்டியராஜன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலையில், தேர் நிலையை அடைந்தது. அதை தொடர்ந்து, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் நிகழ்வு; பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு போன்றவை நடந்தன. பின் இரவில், அகண்ட நாமம், அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல், திருநாமக்கொடி அமர்தல் நிகழ்வுடன், திருவிழா நிறைவுற்றது.