பதிவு செய்த நாள்
10
ஏப்
2012
11:04
திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவிலில், திருமணத்தடை நீக்கும் ஸ்ரீவள்ளி திருக்கல்யாணத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்தது. திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, பங்குனி உத்திர நாளான கடந்த ஐந்தாம் தேதி துவங்கியது. அன்று அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து வந்தும், பல்வேறு வகையான அலகுகளை குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். "அரோகரா கோஷம் எழுப்பியபடி, கோவிலை சுற்றி வலம் வந்தனர்.பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு, முருகனுக்கு காலை எட்டு மணி முதல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு, சிங்கார வேலர் வெள்ளிமயில் வாகனத்தில் எழு ந்தருளி திருவீதியுலா வந்தார். ஆறாம் தேதியன்று, முருகனுக்கு உபய அபிஷேகங்கள் நடந்தது. ஏழாம் தேதியன்று, வள்ளி தினைப்புனம் காத்தல் வைபவமும், மறுநாள் வேடன் விருத்தனாக முருகன் வருதல், யானை விரட்டல் காட்சியும் நடந்தது.ஸ்ரீவள்ளி திருமணம்: பல்வேறு தோஷங்களால் நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் தடைப்பட்டு போனவர்களின், திருமணத்தடை நீக்கும், ஸ்ரீவ ள்ளி சமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கல்யாண வைபவ ம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.