பதிவு செய்த நாள்
10
ஏப்
2012
11:04
இடைப்பாடி: இடைப்பாடி அருகே திடீரென ஏற்பட்ட ஸ்வாமி சிலையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இடைப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சிறுவன் கார்த்தி (13). தந்தையை இழந்த இச்சிறுவன், தன் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறான். செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று, கார்த்தியின் தாய் சந்திரா, வீட்டுக்கு அருகில் உள்ள குண்டானூர் காட்டுவளவு பகுதியில் உள்ள மேய்ச்சல் காட்டில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கார்த்தியும், தன் தாயுடன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுவன் கார்த்தியின் பின்புறம் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனால் பயந்து ஓடிய கார்த்தி, சிறிய பாறை போன்ற கல் மீது மோதி விழுந்துள்ளார். பின், அக்கல்லை எடுத்து நிறுத்தி வைத்துள்ளான். அப்போது, அந்த கல்லில், அம்மன் உருவம் தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை, அருகில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்துள்ளான்.தகவலறிந்த பொதுமக்கள், அக்கல்லை பார்த்தபோது, அதில் சிறுவன் கூறியபடி, அம்மன் உருவம் தெரிந்துள்ளது. அதனால், அப்பகுதியில் திடீர் கோவில் உருவானது. பூஜைகள் செய்து, சிறிய பந்தலும் அமைக்கப்பட்டது. இந்த திடீர் ஸ்வாமி சிலையால், குண்டானூர், செட்டிமாங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.