பதிவு செய்த நாள்
10
ஏப்
2012
11:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில், நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது. இன்று, தீர்த்த உற்சவம் நடக்க உள்ளது. கோவிலில், மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி திருவிழாவில், தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிக்கிறார். நேற்று அதிகாலை 5 மணிக்கு, கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெரிய வைரத் தேரில், பரிவட்டங்களுடன் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கோவிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சார்யார் சுவாமிநாதன் வெள்ளைத் துண்டு வீசியவுடன், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, காலை 6.25 மணிக்கு, நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. நான்கரை மணி நேரம், கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டத்தில், தேர் நகர்ந்து சென்று, கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு, சரவணப் பொய்கையில், சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.