பதிவு செய்த நாள்
10
ஏப்
2012
11:04
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்திபரவசத்துடன் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் தொட்டு தேர் இழுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். நாரதர் தவமிருந்து அம்பாளை வழிபட்டதால் நார்த்தாமலை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(9ம் தேதி) திருத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதுபோன்று உற்ஸவ மூர்த்தி அம்மனுக்கு சர்வ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. சரியாக மாலை 3 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திருக்கோவில் செயல் அலுவலர் சம்பத்குமார் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., தமிழ்சந்திரன் ஆகியோர் வடம் தொட்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றியுள்ள தேரோடும் வீதியில் சிறிதுதூரம் சென்றதும் முன்பக்க சக்கரம் பாதையை விட்டு கீழே இறங்கியது. இதனால் அரைமணி நேரம்வரை தேரோட்டம் தடைபட்டது. தடுப்புக் கட்டைகள் உதவியுடன் பாதையில் தேர் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் கூட்டத்தின் நடுவே ஆடி, அசைந்து வந்த தேர் சரியாக 4.50 மணிக்கு நிலைக்கு வந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்துடன் முத்துமாரியம்மான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நார்த்தாமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கீரனூர் டி.எஸ்.பி., கலியமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கோவிலை சுற்றி சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் கண்காணித்தனர். பங்குனித் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக இன்று பகல் 12 மணிக்கு கோவிலின் அருகில் உள்ள ஆகாச ஊரணியில் முத்துமாரியம்மனுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.