கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள சின்னதிருப்பதி கோவிலில் திருத்தேர் திருவிழா நடந்தது.
கல்வராயன் மலையில் உள்ள சின்னதிருப்பதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சியில் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்தியதுடன், கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தினர். திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளிய தேரினை கோவிந்தா, கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.