பதிவு செய்த நாள்
21
அக்
2019
02:10
காரமடை:காரமடை காந்தி மைதானத்தில் உள்ள, ஐயப்பன் கோவிலில், 50ம் ஆண்டு விழா, விளக்கு பூஜை மற்றும் மகா கும்பாபிஷேகம் என முப்பெரும் விழா நடந்தது.கடந்த 18ம் தேதி விழா துவங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி சுதர்சன ஹோமம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தன. இரவு முதல் கால யாக பூஜை துவங்கியது.
பூர்ணாகுதி மகா தீபாராதனைகள் நடந்தன. 19ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை, ஐயப்பனுக்கு 108 கலசாபிஷேகம் நடந்தது. நேற்று (அக்., 20ல்) அதிகாலை கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் கலந்து கொண்டார். ஞான சுவாமிநாத பண்டிதர் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, அம்மன் விநாயகர், கடுத்த சுவாமி,கருப்பு சுவாமி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து மூல மூர்த்திகளுக்கும்சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை முடிந்து அன்னதானத்துடன் விழா
நிறைவுற்றது.