பதிவு செய்த நாள்
22
அக்
2019
11:10
மடத்துக்குளம் அருகே, வேப்பமரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முத்தாளம்மனை, பல தலைமுறையாக மக்கள் வழிபடுகின்றனர்.கிராமத்தில் பரவிய தொற்று நோயை விரட்ட, மரத்தின் பாகனத்தை பயன்படுத்தியதால், தெய்வங்கள் மரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதாக, மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை ஆழமாக உள்ளது.
அதனாலேயே முன்னோர்கள் மரங்களை வணங்கியுள்ளனர்.இதனால், கோவில்களில் ஸ்தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கப்படுகின்றன.மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிப்புத்துாரில், மரத்தில் முத்தாளம்மன் எழுந்தருளி அருள்பாலிப்பதாக மக்கள் வழிபடுகின்றனர்.மரத்தின் தரைப்பகுதியில் வேல், ஈட்டி நடப்பட்டுள்ளன. மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி, விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். திருவிழா, விசேஷங்கள் மற்றும் அனைத்து சுப காரியங்கள் குறித்து, இந்த மரத்தின் முன் மக்கள் அமர்ந்து பேசி முடிவு செய்கின்றனர்.பக்தர்கள், பூவோடு, மாவிளக்கு, தீர்த்த குடம் எடுத்து, அம்மனை வழிபடுகின்றனர். மரம் வளர்க்கும் தத்துவத்தை, இயற்கையோடும், ஆன்மிகத்தோடும் இணைத்து வழிபடுவது வாழையடி வாழையாக உள்ளது.