பதிவு செய்த நாள்
22
அக்
2019
12:10
கமுதி : கமுதி அருகே குண்டாற்றின் கரையில் உள்ள நரசிங்கம்பட்டியில் கற்காலத்தை சேர்ந்த 3,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கமுதி அருகே நாராயணபுரம் செல்லும் வழியில் நரசிங்கம்பட்டி கிராமம் அருகே ஆற்றுப் பகுதியில் பாறைகளுக்கு நடுவே வட்ட வடிவில் பெரிய பானை இருப்பதை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர். அதில் புதையல் இருப்பதாக கருதி தோண்டியுள்ளனர். அப்படி எதுவும் கிடைக்காததால் முதுமக்கள் தாழிகளை அப்படியே விட்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன், அமைப்பின் தலைவர் ராஜகுரு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது: குண்டாற்றின் கிழக்கு கரையில் சரளை மண் மற்றும் பாறைகள், ஒரு மேட்டுப்பகுதியாக உள்ள இவ்வூரின் ஒரு பகுதியில் புதைந்த நிலையில் இரு முதுமக்கள் தாழிகள் இருந்துள்ளது. இதன் மேற்பகுதிகள் உடைந்தும், உள்ளே கருப்பு சிவப்பு வண்ணத்திலான மெல்லிய, தடித்த பானைகளின் ஓடுகள், உடைந்த கல் வளையம் ஆகியவை இருந்தது.ஒரு முதுமக்கள் தாழி 78 செ.மீ., விட்டத்தில் ஒரு இஞ்ச் தடிமனில் உள்ளது. மற்றொன்று அளவில் இதைவிட சிறியதாக உள்ளது. ஒரு தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடு காணப்படுகிறது. மனிதன் இறந்தபின் மீண்டும் தாயின் கருவறைக்கு சென்று பிறக்கிறான், என ஆதி மனிதன் நம்பியதால் தாழிகள் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிறு போன்று அமைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டு விடுவார்கள்.
அதை நரி, கழுகு போன்றவை இரையாக உட்கொண்ட பின், அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது. கி.மு.,1000 முதல் கி.மு., 3000 ஆண்டுகள் வரையிலான பெருங்கற்காலத்தை சேர்ந்த இடுகாடான இப்பகுதி, சுமார் நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.ஆனால் இப்பகுதி தவிர மற்ற இடங்களின் மேற்பகுதியில் பானை ஓடுகள் ஏதும் காணப்படவில்லை. பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்பகுதியில் இரும்பின் மூலப்பொருள்கள் மற்றும் நுண் கற்கால செதில்கள் அதிகளவில் உள்ளது.மலைப்பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படை சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால், இவை 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாக இருக்கலாம், என்றார்.