பதிவு செய்த நாள்
25
அக்
2019
12:10
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், வரும் 29ம் தேதி குருபெயர்ச்சி மஹாயாகம் நடக்கிறது.
குரு பகவான், வரும் 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி மஹா யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குரு பெயர்ச்சி விழா, வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள், ஒவ்வொன்றும் 108 கிலோ மற்றும் லிட்டர் கொண்டு நடத்தப்படுகிறது.
குரு பெயர்ச்சி தினமான 29ம் தேதி அதிகாலை முதல் குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது. விழாவில், குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், 1008 குட பால் அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.