அன்றாட உணவுக்கே போராடியவர் ஜான் போஸ்கோ. ஆடு, மாடு மேய்க்கும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டு, தன் உழைப்பால் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமித்து குரு மடத்தில் சேர்ந்தார். அங்குள்ள மாணவர்கள் அணியும் வெள்ளை நிற அங்கியுடன் வந்த போஸ்கோவை கண்ட தாய் அழுதாள்.
“மகனே! எதிர்காலத்தில் நீ செய்யும் நற்செயல்கள் குருவிற்கான உயர்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான தகுதியை இழந்தால் உடனடியாக இந்த அங்கியை கழற்றி விடு. பழிச் செயல்களை ஏற்பதை விட, விளைநிலத்தில் நீ பாடுபடுவதை பெருமையாக கருதுவேன். உன்னால் இந்த அங்கிக்கு ஒருபோதும் அவமானம் நேரக் கூடாது” என்றார். தாயின் கட்டளையை ஏற்ற போஸ்கோ நெறி பிறழாமல் வாழ்ந்தார். ஆதரவற்ற ஏழைகளுக்காக பாடுபட்ட அவர், “பிறருக்கு நன்மை செய்ய விரும்பினால் உன்னால் முடிந்ததைச் செய். மற்றதை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்” என அறிவுரை கூறினார்.