பதிவு செய்த நாள்
05
நவ
2019
12:11
சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் 350 ஆண்டு பழமையான வாமனக்கல் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கே.காளிராசா கண்டறிந்துள்ளார்.
அவர் கூறியதாவது: கொல்லங்குடி அருகே வீரமுத்துபட்டியில் செங்குளி வயலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு கையில் விரித்த குடை, மற்றொரு கையில் கமண்டலம், தலையின் பின் பகுதியில் கொண்டை, மார்பில் முப்புரிநுால் பொறித்த வாமன உருவம் காணப்படுகிறது.
மாவிலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கிய திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன உருவம் அரசர் காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடித்துள்ளனர். இக்கல்வெட்டு மூலம் பொது ஆண்டு 1666ல் பிங்கள ஆண்டு கார்த்திகை மாதம் 2 ம் நாள் ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதி, காளையார்கோவில் காளீஸ்வரருக்கு வழங்கிய பிரம தாயமாக இருக்கலாம். இதன் எல்லை கீழ செங்குளி, மேல செங்குளி முனி பட்டையருக்கு அடி ஊரணிக்கு மேற்கு, கண்மாய்க்கு வடக்கு, கண்டிபட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசு கொடை பொட்டலுக்கு தெற்கு. இதில் கிழக்கு பகுதியில் காட்டிய ஊரணி தற்போது இல்லை. ராமநாதபுர சேதுபதி மன்னர்களுள் புகழ் பெற்ற கீழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். ரகுநாத சேதுபதி என்று அழைக்கப்பட்ட இவர், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடத்தில் இணக்கமாக இருந்து போர் உதவிகளை புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலம் 1645 முதல் 1676 வரை. பிரமதாயம் என்பது பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். அரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொடுப்பது மரபு. இது தொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இதுபோன்று மன்னர்கள் தம் ஆட்சிக்காலத்தில் இறையிலி நிலமும், பிரமதாயமும் வழங்கி இறைத்தொண்டு புரிந்தனர் என்பதற்கு இக்கெல்வெட்டே ஆதாரம், என்றார்.