பதிவு செய்த நாள்
06
நவ
2019
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும், கார்த்திகை தீப திருவிழா வரும், டிச.,1ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச.,10ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக விழா ஏற்பாடுகள், அனைத்து துறைகள் சார்பில் நடந்து வருகிறது. மலை ஏறும் பக்தர்கள் மற்றும் மகா தீபம் ஏற்ற செல்வோர் பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி குறித்து, நேற்று மலை அடியிலிருந்து மலை உச்சி வரை மலை ஏறும் பாதை முழுவதும், போலீசார் ஆய்வு செய்தனர். இதில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு அருகே உள்ள, அருணாசலேஸ்வரர் பாதத்திற்கு போலீசார் தேங்காய் உடைத்து கற்பூர தீபமேற்றி வழிபாடு நடத்தினர். இதில், டி.எஸ்.பி., அண்ணாதுரை உள்பட, 10க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.