லக்னோ: காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் உ..பி.,யில் பக்தர்கள் சிலர், கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு முகமூடி அணிவித்துள்ளனர்.
டில்லியை தொடர்ந்து உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் காற்று மாசுபாடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள், காற்று மாசுபாட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிந்தபடியே வெளியே வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் முகமூடியுடனேயே காணப்படுகின்றனர். இந்நிலையில் வாரணாசியில் உள்ள தர்கேஸ்வர மகாதேவ கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு, அக்கோயில் நிர்வாகிகள் முகமூடி அணிவித்துள்ளனர். இது பற்றி பக்தர்கள் கூறுகையில், நகரில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த நச்சுக் காற்றில் இருந்து ஈசனை பாதுகாப்பதற்காகவே நாங்கள் முகமூடி அணிவித்துள்ளோம். அவர் பாதுகாப்பாக இருந்தால், நாமும் பாதுகாப்பாக இருப்போம் என்றனர்.