பதிவு செய்த நாள்
07
நவ
2019
03:11
திருப்புவனம்: கார்த்திகை பிறக்க உள்ளதை முன்னிட்டு கடைகளில் ஐயப்பன் வேட்டிகள், துண்டுகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
வருடந்தோறும் கார்த்திகையில் ஐயப்பன் மற்றும் பழநி முருகனுக்கு 45 நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து இந்துக்கள் சென்று வருவது வழக்கம், கடந்த இரு வருடங்களாக ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பிரச்னை எழுந்ததால் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
கார்த்திகை மாதத்தில் கருப்பு , பச்சை, காவி வேட்டிகள், துண்டுகள் மாலைகள் பெருமளவில் விற்பனையாகவில்லை. இந்தாண்டு பிரச்னை ஏதும் இல்லாததால் கார்த்திகை பிறப்பு அன்று பக்தர்கள் பலரும் விரதமிருக்க முடிவு செய்துள்ளனர். இவர்களுக்காக கடைகளில் வேட்டிகள், துண்டுகள், துளசி மாலை, ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன. வேட்டிகள் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையும், துண்டுகள் 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. துணி கடை உரிமையாளர்கள் கூறியதாவது: இந்தாண்டு நவம்பர் 17ம் தேதி கார்த்திகை பிறக்கின்றது. புதிதாக மாலை அணிபவர்கள் வேட்டிகள், துண்டுகள், ஸ்படிக மாலை, துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். தொடர்ச்சியாக விரதமிருப்பவர்களும் புதிய வேட்டி, துண்டுகள் வாங்குவார்கள் இன்னும் நாட்கள் இருந்தாலும் பலரும் காவி வேட்டிகள் கேட்டு வருவதால் வாங்கி வைத்துள்ளோம், என்றனர்.