பதிவு செய்த நாள்
07
நவ
2019
03:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் சார்பில் தியாகராஜ சுவாமிக்கு கோவில் கட்டும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் நீண்ட நாள் கனவான தியாகராஜா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதை செயல்படுத்த திட்டமிட்டனர். இதற்காக, பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளியில் இடம் வாங்கப்பட்டு, ஸ்ரீ ராம பக்த ஸத்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமி, விநாயகர் கோவில் அமைக்கும் பணிகள், கடந்தாண்டு ஆக., மாதம் துவக்கினர்.
மொத்தம், 30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் தியாகராஜர் சிலை வடிவமைக்கப்பட்டது. சுவாமி சிலைக்கு பூஜை செய்து தண்ணீர் தொட்டியில் வைத்துள்ளனர். பணி நிறைவு பெற உள்ள நிலையில், கும்பாபிஷேகம் நடத்தவும் தயராகி வருகின்றனர். சத்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமி கோவில் கமிட்டி தலைவர் சாருகேசவன் கூறியதாவது: பொள்ளாச்சியில், நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள், 75 பேர் உள்ளனர். கடந்தாண்டு, வெள்ளி விழா ஆண்டு கொண்டாடிய போது, இசைக் கலைஞர்களின் மனதில் இருந்த நீண்ட நாள் கனவான கோவில் கட்டும் பணியை துவக்க முடிவு செய்தோம். திருவையாறுக்கு செல்லும்போதெல்லாம் பொள்ளாச்சியில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால், இந்த கோவில் கட்டும் பணிக்கு உந்துதலாக இருந்தது. கோவிலில் விநாயகர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் முடிவடைய உள்ளதால், வரும், 17ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்துள்ளோம். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் அதிகளவு வர உள்ளனர். வரும் காலங்களில் கோவிலில் இசை நிகழ்ச்சி, பஜனை நிகழ்ச்சி நடத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.