பதிவு செய்த நாள்
08
நவ
2019
10:11
திருப்பூர்: சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு, திருப்பூர் சிற்ப கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான, வெள்ளி குதிரை வாகனம், நேற்று, சிறப்பு பூஜைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பூர், அனுப்பர்பாளையத்தில், உலோக திருமேனிகளை உருவாக்கும், சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில், உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா செல்ல, வெள்ளி குதிரை வாகனம், இங்குள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் சிற்பக் கூடத்தில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, 800 கிலோ தேக்கு மரம், 42 கிலோ வெள்ளியில், 7 அடி உயரத்தில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, ஆபரணங்களை அணிந்து, முன்னங்கால்களை துாக்கி பாய்ந்த நிலையில், குதிரை வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, நேற்று காலை, சிறப்பு பூஜையுடன், கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிற்பக்கூட உரிமையாளர் குணசேகர் கூறியதாவது:ஆறு மாதங்களாக, ஐந்து சிற்பக் கலைஞர்கள், குதிரை வாகனத்தை வடிவமைத்தனர். முதலில், 800 கிலோ தேக்கு மரத்தால், பீடத்துடன், குதிரையின் உருவம் உருவாக்கப்பட்டது.பின், 47 கிலோ வெள்ளி தகடுகளில், தத்ரூபமாக குதிரையின் உருவத்தை செதுக்கி, வாகனம் உருவாக்கப்பட்டது. குமாரபாளையத்தைச் சேர்ந்த செந்தாமரை என்ற பக்தர், இதை, நேர்த்திக்கடனாக தயாரித்து வழங்குகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.