திருப்பரங்குன்றம்,:தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை புனிதம் காக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே பொய்கை நிரம்பும். பொய்கையிலிருந்து தண்ணீர் வெளியேற வழியில்லை. இங்கிருந்து தினமும் வெள்ளி குடத்தில் தீர்த்தம் (திருமஞ்சனம்) எடுத்து யானை மீது கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கொடிகம்பத்தின் அடிப்பகுதி, பலி பீடத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது.
திருவிழா காலங்களில் சுவாமியின் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீர்மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. கொடியேற்ற திருவிழாக்களின் கடைசி நாளில் அஸ்தர தேவருக்குசரவணப் பொய்கையில் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. புனிதம் வாய்ந்த சரவணப் பொய்கையில் அப்பகுதியினர் அசுத்தம் செய்வதால் சுகாதாரக்கேடு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. சரவணப்பொய்கை தண்ணீரை புனித தீர்த்தமாக பாதுகாக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக பொய்கை தண்ணீரை இயந்திரம் மூலம் துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. முடி காணிக்கை பின்புறமுள்ள இடத்தில் கழிப்பிடம், துணி துவைக்க, குளிக்க புதிய கட்டடம் கட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி., ரூ. 44 லட்சம் ஒதுக்கீடு செய்தார். விரைவில் அப்பணிகள் துவங்க உள்ளது. இதன்மூலம் சரவணப்பொய்கை புனிதம் பாதுகாக்கப்பட உள்ளது.