பதிவு செய்த நாள்
08
நவ
2019
11:11
காரைக்குடி: காரைக்குடி அருகே கே.வேலங்குடியை சேர்ந்த சகோதரர்கள் இருவர், இளைஞர்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கின்னஸ் சாதனை படைக்கவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆன்மிக பயணம் செய்கின்றனர். சிவகங்கை மாவட்டம் கே.வேலங்குடியைச் சேர்ந்த துரைராஜ் மகன்கள் பாண்டித்துரை 30, கார்த்திகேயன் 25. மென்பொருள் பொறியியல் படிப்பை முடித்த இவர்கள் பெங்களூருவில் வேலை பார்க்கின்றனர். தங்கள் ஊரில் உள்ள கோயில்கள், ஆன்மிக நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டதாலும், இன்றைய இளைஞர்கள் ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளதை எடுத்துரைக்கும் விதமாக, ஆன்மிகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட இச்சாதனையை செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இச்சாதனைக்காக, 13 ஆயிரம் கி.மீ., காரில் பயணம் செய்து 22 மாநிலங்களில் உள்ள 501 கோயில்களுக்கு ஆன்மிக பயணம் செல்கின்றனர். இதன் மூலம், கின்னஸ், லிம்கா உள்ளிட்ட சாதனைகளை படைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சகோதரர்களை பாராட்டிய, கலெக்டர் ஜெயகாந்தன், எஸ்.பி., ரோஹித்நாதன் இவர்களது பயணத்தை துவக்கி வைத்தனர். இதுகுறித்து பாண்டித்துரை கூறுகையில்; ஜீன்ஸ் போட்ட இளைஞர்களுக்கும் ஆன்மிக உணர்வு உண்டு என்பதை நிரூபிக்கவே இந்த சாதனை பயணம். இந்த பயணத்திற்காக, கடந்த பல மாதங்களாவே, உணவு முறையை மாற்றிவிட்டோம். நாங்கள் செல்லும் காரில், ஜி.பி.எஸ்., சார்ஜர், சமையல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதி உள்ளது. பயணம் 40 நாட்கள் வரை தொடரலாம். பேஸ்புக், ஏனைய இணையசேவை மூலம், எங்களை எப்போதும், தொடர்பு கொள்ள முடியும். ஆன்மிக விழிப்புணர்வோடு கின்னஸ், லிம்கா சாதனைகளை படைக்கவே இந்த பயணம், என்றார்.