பதிவு செய்த நாள்
12
நவ
2019
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில், அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு, 150 கிலோ அரிசியால், சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல், வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி திதி, நேற்றிரவு, 7:09 மணிக்கு தொடங்கி, இன்றிரவு, 8:13 மணி வரை உள்ளது. இதையொட்டி, நேற்றிரவு லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தூரம் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.