பதிவு செய்த நாள்
12
நவ
2019
10:11
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம், ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கோவிலில் 50 கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட அன்னம், 100 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு மூலவர் ஸ்ரீமத் குரு சித்தானந்தா சுவாமிக்கு அன்னாபி ஷேகம் நடந்தது.மாலை 3.00 மணிக்கு துவங்கிய அன்னாபி ஷேக அலங்காரம் 6.00 மணிக்கு நிறைவுபெற்றது.
பின்னர்,தீபாராதனை காண்பிக்கப்பட்டு,அன்னாபிஷேக அலங்காரத்தில் சித்தானந்த சுவாமிபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை செய்து அன்னம் கலைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது. மற்றொரு பகுதி புளியோதரை, எலுமிச்சை, தயிர், சாம்பார், இனிப்பு ஆகிய பிரசாதங்களுடன் சேர்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மணிகண்டன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.சுவாமிக்கு அன்னாபிஷேக அலங்காரத்தை,கோவில் தலைமை குருக்கள் தேவசேனாதிபதி, சேது சுப்ரமணிய குருக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வில்லியனுார் வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் 51ம் ஆண்டு அன்ன அபிஷேக ஆராதனை விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9;00 மணியளவில் சிறப்பு அபிஷேகமுகம், அதனை தொடர்ந்து அன்ன அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணியளவில் அன்னபிஷேக ஆராதனை விழா நடந்தது.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 8:00 மணியளவில் சிறப்புஅன்னபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணியவில் அன்னபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து 7:00 மணியளவில் பவுர்ணமி கிரிவலமும், ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேதபுரீஸ்வரர் கோவில் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா,நேற்று முன்தினம் இரவு விக்னஷே்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 10.30 மணிக்கு வேதபுரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 3.00 மணிக்கு அன்னம் சாத்துதல் துவங்கியது. மாலை 6.00 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 8.30 மணிக்கு அன்னம் களையப்பட்டு பிரசாதத்துடன் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல், காராமணிக்குப்பம் புவன்கரே வீதியில் உள்ள சக்திவேல் பரமானந்தர் சித்தர் பீடம், பாகூரில் உள்ளவேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.