கீழக்கரை:- உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. 51 படி அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு, மங்களநாதர் சிவலிங்கம் மீது அன்னத்தால் சாற்றப் பட்டது. காய்கறிகள், பழங்கள் இவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டார். சிவ சகஸ்ர நாம அர்ச்சனை, நாமஜெபம், பாராயணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருமேனியில் சாற்றப்பட்ட சோறு கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் மீன்களுக்கு இரையாக்கப்பட்டது. பின் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஆண்டு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படாமலும், விவசாயம் செழிக்கவும் இவ்விழா ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் பவள நிற வல்லியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். வடித்த இளஞ்சூடான சாதம் சுவாமியின் திருமேனியில் சாற்றப்பட்டது. காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
*ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின் சாதம், மற்றும் காய்கறிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், பஷே்கார் கண்ணன் செய்திருந்தனர். அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.