பதிவு செய்த நாள்
13
நவ
2019
10:11
மதுரை: வைகை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடாதா... வானம் பொழிந்து... பூமி குளிர்ந்து... விவசாயம் செழிக்காதா... என்ற ஏக்கப் பெருமூச்சுடன் பல ஆண்டுகள் காத்திருந்த மதுரை மக்களின் கண்களுக்கும், உள்ளத்துக்கும், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் வண்ணம் தற்போது இருபுறம் கரைகளை தொட்டபடி வைகை நதியில் வெள்ளம் சீறிப்பாய்ந்தோடி வருவதை காண கண்கோடி வேண்டும்.
கருணை உள்ளம் கொண்ட அன்னையின் வடிவமான வைகைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், வரவேற்கும் மாண்புடன் மதுரை திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று மாலை அனுமார் கோவில் படித்துறையில் மங்கல ஆரத்தி நடந்தது. ‘வைகை அன்னையே வருக... வளங்கள் யாவும் தருக...’ என்ற வேண்டுதலுடன் சின்மயா மிஷன் சிவயோகானந்தா தலைமையில் வைகை நதிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நதியின் தெளிந்த நன்னீர் தீர்த்தத்திற்கு மக்கள் மலர்கள் துாவி வரவேற்பு அளித்தனர்.
சிவயோகானந்தா கூறியதாவது: வைகை நதியின் துாய்மையை காக்கும் பொருட்டு கடந்த ஆகஸ்ட் இறுதியில் துறவியர், மக்கள் சார்பில் புட்டுத்தோப்பில் மழை வேண்டி பத்து நாட்கள் காலையில் யாகம், மாலையில் வைகை நதிக்கு வைதீக முறைப்படி ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. வைகையை துாய்மைப்படுத்த வேண்டும். வைகையை அசுத்தம் செய்யக்கூடாது. குப்பைகள் கொட்டக்கூடாது. வைகையில் வெள்ளம் பெருகி நிரந்தர நீரோட்டம் காண வேண்டும் என்பதை வலியுறுத்தி பிராத்தனை நடந்தது. வேண்டுதல்கள், பக்தி வழிபாடுகளால் இறைவன் மனம் இரங்கி மகிழ்ந்து வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட வைத்துள்ளார்.
வைகையில் முன்பு 12 படித்துறைகள் இருந்தன. அவற்றில் புனித நீராடல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்டவை நடந்தன. தற்போது வைகை கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடப்பது வரவேற்கத்தக்கது. வைகையில் மக்கள் புனித நீராடவும், தர்ப்பணம் செய்யவும், ஒற்றுமையுடன் வழிபாடு நடத்த ஏதுவாக ஒரு பொதுவான இடத்தை ஒதுக்கி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு முன் வரவேண்டும். வைகை கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும், குப்பை கொட்டாமலும், அசுத்தம் செய்யாமலும் துாய்மை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வைகையின் துாய்மையை காப்பது முக்கிய கடமையாக கொள்ள வேண்டும், என்றார். திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்திரசேகரன் ஏற்பாடுகளை செய்தார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், சிவபிரபாகரன், சுடலைமணி, ஆதிசஷேன், பாலு கலந்து கொண்டனர்.