பதிவு செய்த நாள்
14
நவ
2019
10:11
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தான இந்த கோவில், சிதிலம் அடைந்து இருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், இடிக்கப்பட்டு திருப்பணிகள் துவங்கின. கோவில் வளாகத்தில் பாலாலயம் அமைத்து, தினமும் பூஜை செய்யப்படுகிறது. கோவில் நிதி மற்றும் உபயதாரர் மூலம் சுப்ரமணிய சுவாமிக்கு கருவரை, கோபுரம், மகா மண்டபம், அம்மன், சிவன், நவகிரங்களுக்கு என, தனித்தனியாக சன்னதிகளும், காம்பவுன்ட் சுவர், தியான மண்டபம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.சோபன மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி அனுப்பப்பட்டுள்ளது.
பணிகள் முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எப்போது, கும்பாபிஷேகம் நடைபெறும் என, ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அதிகாரிகள் கூறியதாவது:சுப்ரமணிய சுவாமி கோவிலில், சோபன மண்டபம் கட்ட வேண்டியுள்ளது. மணி மண்டபமும், முன் கோபுரமும் சீரமைக்க வேண்டியுள்ளது.இதற்கு தொல்லியல் துறை வல்லுனர்களின் அனுமதியும், இந்து சமய அறநிலைத்துறையின் மாநில தேர் கமிட்டியின் அனுமதியும் பெற வேண்டும். அதன் பின்பு தான், பணிகளை துவக்க முடியும். அனுமதி பெற அனைத்து கோப்புகளும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அனுமதி கிடைத்தவுடன், கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். அனைத்து பணிகளும் முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.