மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

நவம்பர் 16,2019



சபரிமலை : சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது.

கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம் ஆகும். இந்த பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்.

மாலை 6:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியும் இதே போன்று அழைத்து செல்லப்படுவார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும்.

அமைதி நிலவுமா?: அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லும் வழக்கில் தீர்ப்பையடுத்து குழப்பமான நிலை நிலவுகிறது. பெண்களை பாதுகாப்பு கொடுத்து கோயிலுக்கு அழைத்து செல்வதில்லை என்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் பினராயி விஜயன் அரசு வந்துள்ளது. இதனால் சீசன் அமைதியாக இருக்கும் என தெரிகிறது. திருப்திதேசாய் போன்றவர்கள் வந்தால் போலீசாரே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் குடிநீர் வசதி முழுமையாக செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 1200, சன்னிதானத்தில் 1161, பம்பையில் 404 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் 9 ஆயிரம், சன்னிதானத்தில் 6 ஆயிரத்து 500, பம்பையில் மூவாயிரம் பேர் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. போதுமான கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரோடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவும் விறுவிறுப்பாக உள்ளது. புதிய தேவசம்போர்டு தலைவராக வாசுவும், உறுப்பினராக ரவியும் நேற்று பொறுப்பேற்றனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்