புதுச்சேரி: சுவாமி விவேகானந்தர் ரதம், புதுச்சேரிக்கு இன்று வருகிறது. இந்த ரதத்தை, பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் இருந்து, கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று, ரத யாத்திரை துவங்கியது. விவேகானந்தர் ரதம், கடலூரிலிருந்து, இன்று (25ம் தேதி) காலை 10:00 மணிக்கு புதுச்சேரி மாநில எல்லையான கன்னியகோவில் மன்னாதீஸ்வரர் கோவிலுக்கு வருகிறது. ரத யாத்திரைக்கு அமைச்சர் தியாகராஜன் தலைமையிலான விழா குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 10:45 மணிக்கு, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, 11:30 மணிக்கு, தவளக்குப்பம் சந்திப்பு, 12.00 மணிக்கு, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடம், 2:00 மணிக்கு, முதலியார்பேட்டை வானொலி திடல், 3:00 மணிக்கு, ஏ.எப். டி.,மைதானம், 4:00 மணிக்கு, புதுச்சேரி லல்லி தொலான்ஸ் வீதியில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலயா மேனிலைப் பள்ளி, மாலை 5:00 மணிக்கு, சித்தானந்த சுவாமி கோவில் அருகில் பொது மக்களின் தரிசனத்திற்காக நிறுத்தப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு, செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில், விவேகானந்தர் ரதம் பங்கேற்கிறது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தாஜி ஆகியோர் பங்கேற்கிறனர். நாளை (26ம் தேதி) காலை 9:30 மணிக்கு, சங்கர வித்யாலயா மேனிலைப் பள்ளி, 10:00 மணிக்கு, ரெட்டியார்பாளையம் மணக்குள மோட்டார்ஸ் எதிரில், 10:30 மணிக்கு, மூலக்குளம் வழியாக விழுப்புரம் செல்கிறது. தமிழகம் முழுவதும் 300 நாட்களில், 10 ஆயிரத்து 600 கி.மீ., பயணம் மேற்கொண்டு, அடுத்தாண்டு ஜனவரி 8ம் தேதியன்று, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை அடைகிறது. விழா ஏற்பாடுகளை, சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு விழாக்குழுவினரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா சங்கத்தினரும் செய்துள்ளனர்.