Advertisement

கன்னி : குரு பெயர்ச்சி 2020 - 2021

உத்திரம் 2, 3 4ம் பாதம் : அதிர்ஷ்ட வாய்ப்பு

பொது : ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். ராசிநாதன் ஆக புதனையும் நட்சத்திரநாதனாக சூரியனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
நிதி : அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் உங்கள் நிதிநிலை உயர்வடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பாக்ய ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் பேராசைக்கு இடமளிக்காமல் தேவையானவற்றை மட்டும் அடைவதில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டினில் ஆடம்பரப் பொருட்கள் சேரும் நேரம் இது.

குடும்பம் : மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுநாள் வரை விலகியிருந்த சொந்தம் ஒன்று உங்கள் பந்தத்தை நாடி வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக் கோட்டைவிடும் வாய்ப்பு உண்டு. மொழிப்பிரிவு பாடங்களில் சிறப்பு கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்.

பெண்கள் : குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எளிதில் ஏமாறும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் கணவர் மற்றும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும்.

உடல்நிலை : முகத்திலும், உடலிலும் உஷ்ணத்தின் காரணமாக சரும நோய்கள் தோன்றலாம். ஒரு சிலர் கணுக்கால் வலியால் அவதிப்படுவர். காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஒரு சில பிரச்னைகள் தோன்றலாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதை உண்டு என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இரும்புச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.

தொழில் : உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தினைக் காண்பர். தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பரிகாரம் : பூவராஹ ஸ்வாமியை வழிபட்டு வரவும்.

அஸ்தம் : குடும்ப வாழ்வில் குதுாகலம்

பொது : ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகவும், புதனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்கள் மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் உண்டாகக் காண்பீர்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் அமையும்.
நிதி : நேரம் நன்றாக இருப்பதால் சேமிப்பினை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புதிய சொத்து வாங்கும்போது கண்திருஷ்டி கருதி வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடு முதலான அசையாச் சொத்தில் முதலீடு செய்ய விரும்புவீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நிதி உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். பிள்ளைகளின் பெயரில் சேமிப்பினைத் துவக்க கால நேரம் சாதகமாக அமைந்துள்ளது.

குடும்பம் : குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் குதுாகலம் நிலவி வரும். ஐந்தாம் இடத்தில் வந்து அமர உள்ள குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த நேரத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

கல்வி : மாணவர்கள் அவ்வப்போது ஞாபகமறதியால் சிறு சங்கடத்தை சந்திப்பர். பாடங்களைப் புரிந்து படித்தீர்களேயானால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. 06.01.2021 முதல் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகக் காண்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவோடு கஷ்டமான அறிவியல் சமன்பாடுகளையும் எளிதாகப் புரிந்துகொள்வீர்கள். 2021ல் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கைளப் பெறுவதற்கு குரு துணையிருப்பார்.

பெண்கள் : குடும்பப் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவரின் உதவியோடு வெற்றி கண்டு வருவீர்கள். பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதில் மன நிம்மதி காண்பீர்கள். குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்கும்போது மன வருத்தம் கொள்வீர்கள். சென்ட்டிமெண்ட் உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவது உங்கள் பலவீனமாய் அமைகிறது.
உடல்நிலை : குருவின் பார்வை பலத்தினால் தேக உடல்நிலை நல்ல முறையில் இருந்து வரும். எனினும் ரத்த சோகை, உடல் அசதி ஆகியவற்றைத் தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மூன்றாம் இடத்து கேதுவினால் நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் தோன்றலாம். வெந்நீரை மட்டும் பருகி வருவது நல்லது.
தொழில் : தொழில்முறையில் அனுசரணையான அணுகுமுறை உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவதால் அலுவலகத்தில் நிம்மதியான சூழலை உணர்வீர்கள். மளிகை, உணவுப்பொருள் வியாபாரம், காய்கறி, பழம் வியாபாரம் செய்பவர்கள், விவசாயிகள் ஏற்றம் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணும் நேரமாக அமையும்.

பரிகாரம் : தினமும் காலையில் துளசிச் செடிக்கு நீருற்றி வணங்கி வரவும்.

சித்திரை 1, 2ம் பாதம் : குருபார்வையால் வெற்றி

பொது : சுக ஸ்தான அதிபதி ஆகிய குரு ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஒரு வருட காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டு குழுவாக செயல்படுவீர்கள். பொதுநலச்சேவையில் அதிக ஈடுபாடு உண்டாகும். அர்த்தாஷ்டமச் சனியால் கண்டு வரும் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும். மனதில் சந்தோஷம் குடிபுகும். நட்சத்திர அதிபதி ஆகிய செவ்வாயின் வேகமும், ராசி அதிபதி ஆகிய புதனின் விவேகமும் இணையப்பெற்ற உங்களுக்கு குருவின் அருட்பார்வையும் கிடைப்பதால் வெற்றி தரும் காலமாக அமைந்திருக்கிறது.

நிதி : செவ்வாயின் அனுக்ரஹத்தைப் பெற்றிருக்கும் உங்களுக்கு பூமி லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆர்வம் உள்ளவர்கள் விவசாய நிலங்களில் முதலீடு செய்வதற்கான நேரம் கூடி வரும். அசையாச் சொத்துக்களில் செய்யும் முதலீடு உங்கள் பரம்பரைக்கே உதவியாய் அமையும். ஷேர்மார்க்கெட், ம்யூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளும் உங்களுக்கு லாபத்தினைப் பெற்றுத் தரும்.

குடும்பம் : குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமைப்படத்தக்க வகையில் அமையும். உடன்பிறந்தோர் வகையில் மனவருந்தும் சம்பவங்கள் நிகழும் வாய்ப்பு உண்டு.

கல்வி : குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் மாணவர்களின் அறிவுத்திறன் உயர்வடையும். ஆயினும் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம்பிடிக்க பிறந்த ஊரிலிருந்து தொலைதுாரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அயல்நாட்டுப் படிப்பிற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமானதாக இருக்கும். மெக்கானிகல், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரிகல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற தொழிற்கல்வி சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : கணவருடன் இணைந்து செயல்பட்டு பல்வேறு குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். புகுந்த வீட்டில் துரோகம் செய்யும் உறவினர் ஒருவரின் உண்மையான முகத்தினை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களுக்கு பக்கபலமாய் துணைநிற்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தையும் அலுவல் பொறுப்பையும் சரியான அளவில் சமாளித்து வெற்றி காண்பர்.

உடல்நிலை : உடல் உஷ்ணத்தின் காரணமாக உடலில் ஆங்காங்கே சருமத்தில் மாறுபாடு உண்டாகலாம். உணவினில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது நல்லது. நல்லெண்ணெய் உட்கொள்வது உடல் ஆரோக்யத்தை கட்டிக்காக்கும்.

தொழில் : குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் வருகின்ற ஒரு வருட காலத்திற்கு சீரான தனலாபம் அடைவார்கள்.
பரிகாரம் : ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள்.

Advertisement
 
Advertisement