Advertisement

விருச்சிகம் : குரு பெயர்ச்சி 2020 - 2021

விசாகம் 4ம் பாதம் : முயற்சி திருவினையாக்கும்

பொது : குருப்பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். தனாதிபதியான குருபகவான் தன் வீட்டிலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். ராசிநாதனாக செவ்வாயையும் நட்சத்திர அதிபதியாக குருவையும் பெற்றிருப்பதால் நேர்மையும் வீரமும் உங்களது இரு கண்களாக விளங்கி வரும்.

நிதி : தனாதிபதி ஆகிய குருவின் இடமாற்ற நிலை சற்று தடுமாற்றத்தைத் தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வழியில் சுபவிரயத்தினை சந்திப்பீர்கள். ஆன்மிக செலவுகள் கூடும். சேமிப்பினை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் சிறப்பு கவனம் தேவை.

குடும்பம் : ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது வாழ்க்கைத் துணையையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களில் நீங்கள் நேரடியாக தலையிடாமல் அவரது துணையுடன் செயல்பட்டால் பிரச்னைகள் விரைவில் தீர்வு காணும். சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணையும் நேரம் இது. உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.
கல்வி : மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள். சட்டம், மருத்துவம் மற்றும் அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.

பெண்கள் : அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாகி வருவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். குடும்பப் பெரியவர்களுக்கு சேவை செய்வதில் மனதிருப்தி காண்பீர்கள். அக்கம்பக்கத்து பெண்டிரோடு கொண்டிருக்கும் சுமூக உறவு தக்க சமயத்தில் உதவியாய் அமையும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது அவசியம்.

உடல்நிலை : உடல் ஆரோக்கியத்தில் உண்டாகும் மாற்றத்தினை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. இன்னதென அனுமானிக்கப்பட இயலாத புதிய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு முதலான பிரச்னைகளை சந்திப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம்.

தொழில் : கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றாமல் இருக்க கணக்கு வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். லேடி டாக்டர்கள் சாதனை படைப்பார்கள். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டுச் செல்வதோ, அல்லது அடுத்தவர்களின் வேலையை கூடுதலாகச் சுமப்பதோ கூடாது. பிறர் செய்யும் தவறு தொழில் முறையில் உங்களுக்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கலாம். அரசியல்வாதிகள் பல்வேறு சோதனைளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பரிகாரம் : மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருந்து வேல்வழிபாடு செய்து வருவது நல்லது.

அனுஷம் : நிதிநெருக்கடி உருவாகும்

பொது : குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ஒருவித ஐயப்பாட்டோடு செயல்படுவீர்கள். ராசிநாதன் செவ்வாயின் வேகம் துணையிருந்தாலும் நட்சத்திரநாதன் ஆன சனியின் நிதானமும் உங்கள் செயலில் வெளிப்படுவதால் எவராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதவாறு உங்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
நிதி : நிதி நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் தொடர்ந்து மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும். ஒரு நல்ல வருமானமும் மற்றொரு சுமாரான வருமானமும் வருவதைக் காண்பீர்கள். எதிர்பார்க்கும் பணஉதவி கிடைத்துவிடும் என்று நம்பி ஒரு செயலில் இறங்க இயலாது. கையில் இருந்தால் தவிர தைரியமாக ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது தவித்து வருவீர்கள். குருவின் நீச பலத்துடன் கூடிய மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் தொடர்ந்து நிதி நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கும்.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேச கால நேரம் அமையாது சிரமத்தை சந்தித்து வருவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை. நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சாதகமாகப் பேசப்போய் நட்பு வட்டத்தில் விரிசல் உண்டாகக் காண்பீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றினாலும் பெருத்த பிரச்னை ஏதும் இல்லை. குடும்பப் பெரியவர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வரும்.

கல்வி : மாணவர்கள் கல்விநிலையில் முன்னேற்றம் காண போராட வேண்டியிருக்கும். மனப்பாடம் செய்து படிப்பதை விட அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. எழுதும் திறன் நன்றாக உள்ளதால் அதன் மூலம் சாதிப்பீர்கள். மொழிப் பாடங்கள், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் : மனதில் எதையும் வைத்துக்கொள்ளாது வெளிப்படையாகப் பேசிவிட வேண்டியது அவசியம். வீணாக மனதில் வைத்துப் பூட்டிக்கொள்வதால் உடல்நிலையில் உபாதைகளை சந்திப்பீர்கள். தற்போதைய கிரஹ நிலையின்படி மனசஞ்சலம் என்பது பிரதானமான இடத்தினைப் பிடிக்கிறது. குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு பக்கத்துணையாக அமையும். அண்டை வீட்டாரோடு அன்பாகப் பழகி வருவீர்கள்.

உடல்நிலை : வண்டி வாகனங்களில் பயணிக்கும்போது சிறப்பு கவனம் தேவை. தசைப்பிடிப்பு, எலும்பு மஜ்ஜைகளில் பிரச்னை, கால்சியம் குறைபாடு ஆகியவற்றால் சற்றே சிரமம் உண்டாகும். ஒரு சிலருக்கு உடம்பினில் ஆங்காங்கே கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம். புகையிலை, பான்மசாலா போன்ற லாகிரி வஸ்துக்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையான அழுத்தத்தினை சந்திப்பார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க நேரிடும். அதே நேரத்தில் உடன் பணிசெய்வோரின் துணையுடன் உங்கள் பொறுப்புகளை சமாளித்து வெற்றி காண இயலும். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். மருந்துக்கடை, வேளாண்மை உரம், எரிபொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். சுயதொழில் செய்வோரில் அழகு நிலையம், ரத்தப் பரிசோதனைக் கூடம், பிஸியோதெரபி முதலான துறையைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த மாற்றம் உண்டாகும். உழைப்பினால் உயர்வு காணும் காலமாக அமைந்திருக்கும்.

பரிகாரம் : குடும்ப புரோஹிதருக்கு வஸ்திர தானம் செய்யவும்.

கேட்டை : நண்பர்களால் உதவி

பொது : புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன்முயற்சியின் வலிமை கூடும். உங்கள் பெயரை உபயோகப்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பலனை அனுபவித்துவிடுவார்கள். உங்களது இயற்கை குணமான குறும்புத்தனமும், கலகலப்பும் சற்று குறையும். ராசிநாதன் செவ்வாயின் வேகமும், நட்சத்திர நாதன் புதனின் விவேகமும் இணைந்து உங்கள் வெற்றிக்குப் பக்கபலமாய் துணைநிற்கும். அனுபவ அறிவினைப் பெறுவதால் அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள்.

நிதி : சேமிப்பில் ஒருவிதமான தேக்கநிலையினை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். பெரிதாக செலவு செய்யாதது போல் தோன்றினாலும் அவ்வப்போது செய்துவரும் சிறு சிறு செலவுகள் சேமிப்பில் தடையினை உண்டாக்கும். தாயார் வழி உறவினர் ஒருவருக்கு நிதியுதவி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்தில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமூகமாக முடிவடையும். வண்டி வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும்.

குடும்பம் : உடன்பிறந்தோருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய நேரிடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள இயலாமல் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். குடும்பப் பெரியவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சில நேரத்தில் குடும்பப் பிரச்னைகளுக்கு விடை காண்பதில் தடுமாற்றம் உண்டாகும்போது வாழ்க்கைத்துணையின் கருத்துக்களை ஆமோதித்து நடந்து கொள்வதன் மூலம் வெற்றி பெற இயலும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் எழுத்து வேகத்தினை உயர்த்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவார்கள். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி வருவதன் மூலம் மனதில் தன்னம்பிக்கை உயரும். மனப்பாடப் பயிற்சியில் லேசான தடுமாற்றம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கல்விநிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

பெண்கள் : சாதுர்யம் நிறைந்த பேச்சு உங்களின் பலமாக உள்ளது. அண்டை வீட்டாரின் சொந்த விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமான பணிகளுக்குச் செல்லும்போது கணவரையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. உறவினர்களின் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் முக்கியப் பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்.

உடல்நிலை : உடல் ஆரோக்யத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் நேரம் இது. குறிப்பாக பெண்கள் நரம்புத்தளர்ச்சி, உடல் அசதி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். மனதில் உண்டாகும் இனம்புரியாத கலக்கம் உடல்சோர்வாக வெளிப்படும். உள்ளத்து உணர்வுகளை அவ்வப்போது நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்து வந்தாலே எந்த ஒரு நோயையும் வெற்றி காண இயலும்.

தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவார்கள். தனியார் துறை மற்றும் ஐ.டி.துறையைச் சேர்ந்த பணியாளர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆயினும் உழைப்பிற்கேற்ற ஊதியம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி மற்றும் காவல்துறை பணியாளர்கள் நற்பெயர் காண்பார்கள். இயந்திரத்துறை பணியாளர்கள் பணியின்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தொழிலதிபர்கள் அதிக முதலீட்டினைத் தவிர்த்து குறைந்த முதலீட்டில் லாபம் காண முயற்சிக்க வேண்டும். ரியல் எஸ்டேட், கமிஷன், தரகு முதலான தொழில் செய்பவர்கள் குருவின் அருளால் சிறப்பான லாபத்தினைக் காண்பார்கள்.
பரிகாரம் : தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது, தியானநாராயண ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.

Advertisement
 
Advertisement