Advertisement

தனுசு : குரு பெயர்ச்சி 2020 - 2021

மூலம் : சாதுர்ய பேச்சால் சாதிப்பீர்கள்

பொது : கடந்த ஒரு வருட காலமாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். ஜென்ம ராசிக்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய குரு தன ஸ்தானத்தில் அமர்வதால் சுகமான வாழ்வினைக் காண்பீர்கள். அதே நேரத்தில் நட்சத்திர அதிபதி கேதுவின் 12ம் இடத்து அமர்வினால் ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடும் தோன்றும்.

நிதி : அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அநாவசிய செலவினங்களைத் தவிர்க்க இயலும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நிலுவையில் உள்ள பாக்கித்தொகைகள் வசூலாகும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். பொருளாதார நிலை உயர்வடையக் காண்பீர்கள்.
குடும்பம் : ஆளுக்கொரு பாதையில் சஞ்சரிக்கும் குடும்பத்தினரை ஒருங்கிணைப்பதில் சற்று போராட்டம் காண்பீர்கள். எல்லோருடைய தேவையையும் நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மன நிலையிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். தம்பதியருக்குள் வாக்குவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்களே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். உடன்பிறந்தோருக்கு நிதியுதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்விநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். தேர்வு நேரத்தில் குரு பகவானின் அருளால் பொது அறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் பெறுவார்கள்.

பெண்கள் : உங்களின் விவேகமான அணுகுமுறையால் குடும்பப்பிரச்னைகளை எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்க வைப்பீர்கள். கணவரோடு அவ்வப்போது வீண் விவாதம் தோன்றும். அவருக்கு சரியென்று படுவது உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம். ஆயினும் தம்பதியருக்கிடையே அன்யோன்யத்திற்கு குறைவு நேராது. பிரச்னையான சூழலில் பேசாமல் அமைதியாக இருப்பதன் மூலம் செயல்வெற்றி கண்டு வருவீர்கள்.

உடல்நிலை : ஒற்றைத் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, கைகால் குடைச்சல், இடுப்பு வலி போன்ற பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடலாம். இயற்கை மருத்துவமுறை நன்மை தரும். புதிய மருந்துகளால் உடலில் பக்க விளைவுகள் தோன்றக்கூடும். எச்சரிக்கை தேவை.

தொழில் : குரு நீசம் பெற்றாலும் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல சம்பாத்யத்தைக் காண்பீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் பல காரியங்களை சாதிப்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் அவ்வப்போது கேம்ப், இன்ஸ்பெக்ஷன் என்று அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ். சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்துச் செயல்பவடுவது நல்லது. தொழிலதிபர்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வார்கள். ஓய்வின்றி செயல்பட்டாலும் அதற்குரிய தனலாபத்திற்கும் குறைவிருக்காது.
பரிகாரம் : மஹாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள்.

பூராடம் : சேமிப்பு பன்மடங்காகும்

பொது : எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதற்கு முன்னால் யோசித்து செயலில் இறங்குவது நல்லது. அதில் உள்ள நன்மை தீமையை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதன் மூலம் நிச்சயமாக வெற்றி உண்டாகும். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுவதன் அவசியத்தை உணர்வீர்கள். இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். ராசிநாதன் குருவின் தன ஸ்தான சஞ்சாரமும், நட்சத்திரநாதன் சுக்ரனே தனகாரகன் என்பதாலும் பொருள் சேமிப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவீர்கள்.
நிதி : பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடந்த சில வருடங்களாகக் காண இயலாத வளர்ச்சி அடுத்து வரும் காலத்தில் உண்டாகும். சம்பாதிக்கும் பணம் புதிய சொத்தாக உருமாறும். வீடு, மனை வாங்க முயற்சிப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். தங்க நகை, ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். சொத்துப் பிரச்னை சார்ந்த வழக்குகள் சாதகமான முடிவினைக் காணும்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள். குடும்பத்தினர் மத்தியில் இருந்து வரும் மனக்கசப்பினைப் போக்கி அனைவரையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சின் மூலம் எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பீர்கள். உறவினர்கள் வழியில் உண்டாகும் கலகத்தினையும் அழகாக சமாளித்து யாருக்கும் எவ்வித பாதகமுமின்றி குடும்பத்தை அழகாக வழிநடத்திச் செல்வீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலை நல்ல வளர்ச்சியைக் காணும். மதிநுட்பம் கூடும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சிறப்பு உயர்கல்விக்காக அயல்நாடு செல்லக் காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். சிறு சிறு கவனக் குறைவின் காரணமாக உண்டாகும் நிகழ்வுகள் தேர்வின்போது பெரிய தாக்கத்தினை உண்டாக்கலாம் என்பதால் அதீத கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பெண்கள் : ஆடம்பர செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது உங்களது முக்கியமான கடமையாக அமைகிறது. சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நீங்கள் அணிந்திருக்கும் நகை மற்றும ஆபரணங்களின் மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். என்றும் மாறாத புன்னகை என்பது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்திக் காட்டும். கணவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு பக்கபலமாகத் துணை நிற்பீர்கள்.

உடல்நிலை : குருவின் சஞ்சாரம் திருப்திகரமாக உள்ளதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனினும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருப்பதை நினைவில் கொண்டு உடல் ஆரோக்யத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆறாம் வீட்டு ராகு ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடல் ஆரோக்யத்திற்கு துணை செய்வார் என்பதால் பயம் தேவையில்லை. குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் அறுவை சிகிச்சைகள் நன்மையைத் தரும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.
தொழில் : ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை உத்யோகத்தில் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரியும். பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்பு வந்து சேரும். அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவீர்கள். சொந்த ஊரை ஒட்டி இடமாற்றத்திற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக உள்ளது. சுயதொழில் செய்வோர் நல்ல தன லாபத்தினைக் காண்பார்கள். ஜோதிடம், புரோஹிதம், வைதீகம், கோவில் பூஜை சார்ந்த தொழிலைச் செய்து வருபவர்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையக் காண்பார்கள். கலைத்துறையினர் விருது பெறுவர். வியாபாரிகள் தங்கள் முகராசியின் மூலம் நற்பெயர் அடைவர். தொழிலதிபர்கள் தங்கள் ஸ்தாபனத்திற்கு மேலும் பல கிளைகளை உருவாக்கும் முயற்சியில் வெற்றி காண்பர். மொத்தத்தில் தொழில் வளர்ச்சி என்பது சிறப்பாகவே உள்ளது.
பரிகாரம் : காமதேனு வழிபாடு என்பது நன்மை தரும்.

உத்திராடம் 1ம் பாதம் : போட்டியில் வெற்றி

பொது : சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் அக்கறை கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக அமையும். நீங்கள் கூறும் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்கும். அதுவே சில நேரத்தில் உங்களுக்கு எதிரானதாகவும் திரும்பக்கூடும். நம் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் மத்தியில் மட்டும் பேசுவது நல்லது. குருவை ராசிஅதிபதி ஆகவும், சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களது கவுரவம் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் நிச்சயம் உயர்வடையும்.
நிதி : ஜனவரி ஆறாம் தேதி வரை சீராக இருந்து வரும் தன வரவு அதன் பிறகு வேகமான வளர்ச்சியைக் காணும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்து வாங்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக விற்க நினைக்கும் சொத்து ஒன்று நல்ல விலைக்குப் போகும். அதே நேரத்தில் முன்பின் தெரியாத புதிய நபர்களை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் இறங்கக் கூடாது. மாற்றுமொழி பேசும் நபர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை.

குடும்பம் : பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். அவர்களது ஆதரவுடன் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். குடும்ப விஷயங்களில் நண்பர்களின் தலையீட்டினை அனுமதிக்காதீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலையில் அதிக அக்கறை கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றம் காண்பீர்கள்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலை ஆசிரியர்களின் துணையுடன் வளர்ச்சியைக் காணும். அதே நேரத்தில் புதிய பாடத்திட்டம் மாணவர்களின் மனதில் குழப்பத்தினை உண்டாக்கக்கூடும். உயர்கல்விக்குள் நுழைந்திருக்கும் மாணவர்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் தடுமாற்றம் காண்பார்கள். கலைத்துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். போட்டித்தேர்வின் போது சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் உண்டாகும் குழப்பத்தினைப் போக்க தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். கணிதம், சட்டம், பொருளாதாரம், வணிகவியல் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் பொறுப்புகள் கூடுவதால் சற்றே ஆயாசமாக உணர்வீர்கள். உதவி செய்வதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவ்வப்போது தலைதுாக்கும். உங்கள் உள்ளத்து உணர்வுகளை கணவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்திருங்கள். உடல் உடல்நிலை பெறுவதோடு சுகமான சூழலையும் உணர்வீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுவதன் மூலம் ஒரு சில சங்கடத்தினை சந்திக்க நேரலாம். கவனம் தேவை.

உடல்நிலை : நீண்ட நாட்களாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். அதே நேரத்தில் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நேரம் நன்றாக இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இரவில் நிம்மதியான உறக்கம் தேவை. பகலில் உறங்குவதைத் தவிர்க்கவும். ஷிப்ட் முறையில் நைட் டியூட்டி பார்ப்பவர்கள் முடிந்தவரை அதனைத் தவிர்த்து பகல் நேரத்தில் பணி செய்ய முயற்சிப்பது நல்லது.

தொழில் : மார்ச் மூன்றாம் தேதிக்குப் பிறகு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கான வாய்ப்பினை உத்யோகஸ்தர்கள் பெறுகிறார்கள். அரசியல்வாதிகள் பலம் பெறுவர். பணிச்சுமை என்பது தொடர்ந்தாலும் அதனை திறம்பட சமாளிக்கும் வலிமையையும் பெற்றிருப்பீர்கள். முயற்சி என்பது மட்டும் தேவை. பணியில் காட்டும் சிறு அலட்சியத்திற்கும் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் போட்டியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வெற்றி காண்பர். தொழில்முறை எதிரிகளையும் நண்பர்களாகவும் பங்குதாரர்களாகவும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கூடி வரும். சட்டம், காவல், ராணுவம், வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். சிறுகுறு தொழில் செய்பவர்கள் அதனை பெரிதாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பார்கள்.

பரிகாரம் : மாதத்தில் ஒருநாள் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடவும்.

Advertisement
 
Advertisement