Advertisement

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தேகத்திலே சாக்லெட் வேகத்திலே ராக்கெட்

சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு கடந்த காலம் ஒரு கசப்பான அனுபவத்தையே தந்திருக்கும். உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குருபகவான் இருந்ததால் பிரச்னை அதிகமாகி இருக்கும். பொருளாதார ரீதியாகவும் கடன் வாங்கும் நிலைக்கு கூட தள்ளப்பட்டிருக்கலாம். மேலும் பொருள் நஷ்டம், பதவி இழப்பு போன்றவையும் நடந்திருக்கலாம். இந்த குரு பெயர்ச்சி மூலம் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். ஏழரை சனியின் தாக்கத்தை குரு பகவான் குறைத்து விடுவார். அதாவது சிரமங்களைத் தாங்கும் வல்லமையும், மனப்பக்குவத்தையும் தந்து விடுவார். ஏனெனில் அவர் 10ம் இடமான சிம்ம ராசியில் இருந்து 11ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளை தர காத்திருக்கிறார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். பணி சிறப்படையும்.அதோடு குருவின் 7, 9ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக விழுவதால் நன்மையின் அளவு அதிகரிக்கும். உதாரணமாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சாக்லெட் கிடைத்த குழந்தைகள் போல நோய் நீங்கி மகிழ்ச்சியடைவார்கள்.

தொழில் ரீதியாக ராக்கெட் வேகத்தில் உயரலாம். சனிபகவான் தற்போது உங்கள் ராசியில் இருந்து சிரமங்களையும், உறவினர் வகையில் வீண் மனக்கசப்பையும் தந்தாலும் கூட சமாளித்து விடுவீர்கள். மேலும் சனியின் 3ம் இடத்துப் பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். வெளியூரில் வாசம் செய்ய வேண்டிய நிலை சிலருக்கு வரலாம். ராகு 10ம் இடமான சிம்மத்திலும், கேது 4ம் இடமான கும்பத்திலும் இருக்கின்றனரே! இது அவ்வளவு சிறப்பான இடங்கள் இல்லையே என்று நினைப்பவர்களுக்கும் குரு ஆறுதல் தருவார். ஏனெனில் அவர்களால் ஏற்படும் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் குரு தடுத்து விடுவார். நீங்கள் செய்ய வேண்டியது சேர்க்கை விஷயத்தில் கவனம் மட்டுமே. தீயோர் சேர்க்கைக்கு ஆளாகாமல், உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் உணவு பழக்கம், நல்ல பழக்கம், தியானம், ஆன்மிக எண்ணங்களை வளர்த்துக் கொள்தல் போன்றவற்றை செய்து விட்டால், உங்களுக்கு குரு அதிக மார்க் போட்டு விடுவார். மொத்தத்தில் பொருளாதார வளம் சிறப்படையும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும். தடைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உங்கள் ஆற்றல் மேம்படும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தாரிடம் மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தம் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அனுகூலம் ஆகும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் பெறலாம். உறவினர்கள் வகையில் நிலவும் மனக்கசப்பு அகலும். அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடுமனை வாங்குவர். அல்லது தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புகுவர். வாகன சுகம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: இதுவரை சொல்ல முடியாத அளவுக்கு இன்னலை சந்தித்து
இருப்பீர்கள். எதைத் தொட்டாலும் வளர்ச்சியை விட சறுக்கலே அதிகமாக இருந்திருக்கும். வெளியூர் பயணம் வீணாக போய் இருக்கும். இனி இந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் பட்ட கடனை திருப்பி செலுத்தலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உங்களுக்கு பகைவர்களாக இருந்தவர்கள் உங்களை உணர்ந்து சரண் அடைவர். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் முதலியவை நன்றாக வளர்ச்சி அடையும். இரும்பு வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செய்யவும். போட்டியாளர்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பொதுவாக பணத்தைவிட அறிவை மூலதனமாக இட்டால் லாபத்தை அள்ளி விடலாம். புதிய முதலீடுகளைவிட இருப்பதை செம்மையாக நடத்துவது சிறப்பு.

பணியாளர்கள்: தற்போது உள்ளதை விட கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை அடியோடு மறையும். புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர்
அதிகாரம் மிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். உங்களை பற்றி புரியாதவர்கள் உங்களை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உங்கள் திறமை பளிச்சிடும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி உன்னதமாக இருக்கும்.

கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். கடந்த காலத்தில் கிடைக்காமல் போன பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி வரும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பலனை காணலாம். பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: கடந்த ஆண்டு சுமாராகத்தான் இருந்திருக்கும். வரும் கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். ஓரளவு மதிப்பெண் பெற்றவர்கள் கூட நன்றாக படிக்க ஆரம்பித்து விடுவார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் விரும்பிய பாடம் கிடைக்கும். மேலும் வரும் ஆண்டு படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தை பெறுவர்.

விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். நஷ்டம் என்ற நிலை மாறி உன்னதமான நிலைக்கு செல்வீர்கள். செலவு அதிகம் பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். நெல், சோளம் கொள்ளு, பழ வகைகள் மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்போர் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். வழக்கு
விவகாரங்கள் சாதகமாக அமையும். இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் பைசலாகும் வாய்ப்பு உண்டு.

பெண்கள்: பிள்ளைகளால் பெருமை காண்பர். வேலையில் இருக்கும் பெண்கள் மேன்மை அடைவர். புத்தாடை, நகை, ஆடம்பர பொருட்கள் அதிகமாக வாங்குவீர்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுத்து போகவும். உங்களிடம் இருந்து வந்த மந்த நிலை மறையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரத்தையும், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

Advertisement
 
Advertisement