Load Image
Advertisement

கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

உத்திரம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார், கேது பகவான் முதல் பாதத்தினருக்கு தைரிய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து வந்தார். இதனால் முதல் பாதத்தினர் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதற்கு ஈடாக நன்மைகளையும் அடைந்து வந்தனர், அதே நேரத்தில் 2,3,4 ம் பாதத்தினர் அனைத்து வகையிலும் போராட்டத்திற்கு ஆளாயினர். இந்நிலையில் அக்.8, 2023 அன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?

உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகையானவர்கள். முதல் பாதத்தினருக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது முதல் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாகவும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தினருக்கு, அனைத்திலும் சங்கடம், நெருக்கடி, பாதிப்பு என்பதுடன் உடல்நிலையிலும் பின்னடைவு, குடும்பத்திலும் போராட்டம் என்ற நிலையும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, இடம் விட்டு இடம் மாறும் நிலையும், தீயவர்களோடு பழக்கம் கொள்ளும் சூழலும் உண்டாகும். சிலர் அவப்பெயருக்கும் ஆளாக நேரிடும். செயலில் தடை, உடல்நிலையில் சங்கடம், அன்புடன் பழகி வந்தவர்களை விட்டு விலகும் நிலையும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சியாகும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை மகரத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்ர நிவர்த்தியாவதுடன் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிப்பவர் முதல் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தினர் உடல் ரீதியாகவும், கூட்டுத்தொழில் வகையிலும், நண்பர், வாழ்க்கைத் துணை வகையிலும் சங்கடங்களை சந்திக்கலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு நெருக்கடிகள் நீங்கும், உடல்நலக்குறைவு நீங்கும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் பலமிழந்து விலகிச் செல்வர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு, எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம குருவாகி சங்கடம், அவமானம், நெருக்கடியை உண்டாக்குவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். மே1, 2023 முதல் சிம்ம ராசியினருக்கு 10 ம் இடத்திலும், கன்னி ராசியினருக்கு 9 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டமான நிலையையும், 2,3,4 ம் பாதத்தினர் யோகப் பலன்களையும் அடைவர். எதிர்பார்த்த லாபம், முன்னேற்றம் காண்பர்.

பொதுப்பலன்: எதிலும் முதன்மை பெற வேண்டும் என செயல்படும் உங்களுக்கு இக்காலத்தில் இருவித பலன்கள் உண்டாகும். முதல் பாதத்தினருக்கு அனைத்திலும் சங்கடம், நினைப்பது ஒன்று நடப்பது வேறாகவும் இருக்கும், வாழ்க்கை, தொழில், குடும்பம், பணம், ஆரோக்கியம் என அனைத்திலும் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு கேதுவால் நெருக்கடி உண்டானாலும் சனி, குருவால் நன்மை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும், எதிர்ப்பு விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும், பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் நிலை உண்டாகும்.

தொழில்: எதிர்பாராத நெருக்கடிகளை உண்டாக்கும். வாடிக்கையாளர்கள் விலகிச் செல்வர். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு கவனம் மாறும். எதிர்பாலினர் வழியில் ஏற்படும் மாற்றங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பின்னடைவு உண்டாகும், வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு பொறுப்புகள் வந்து சேரும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள்/ உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு எதிராகவே இருப்பர்.

பெண்கள்: குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும், அலுவலகப் பணியிலும் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2024 மே1 க்கு பிறகு எதிர்பார்த்த நன்மை உண்டாகும். சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கல்வி: படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சிலருக்கு குடும்பச் சூழல் அமையும். திசா புத்தி பலமானவர்களுக்கு இந்நிலை இருக்காது. மே 1, 2024 முதல் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

உடல்நிலை: உடல்நலனில் திருப்தி இல்லாமல் போகும், ஏதேனும் ஒரு நோய் அடிக்கடி ஏற்பட்டு சங்கடப்படுத்தும், உழைப்பின் காரணமாகவும் சோர்வு உண்டாகும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.

குடும்பம்: மே1, 2024 வரை உறவினர் வழியில் அதிருப்தி இருக்கும். வாழ்க்கைத் துணையுடனும் பிரச்னைகள் தோன்றும், தொழில், வருமானம், ஆரோக்கிய நிலைகளில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அதன்பின் சுபிட்சநிலை உண்டாகும், பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்யுங்கள். துர்கை, விநாயகரை சங்கடம் தீரும்.
அஸ்தம்: செல்வாக்கு உயரும்

கடந்த ஒன்றரை ஆண்டாக ராகு 8ம் இடமான மேஷ ராசியில் சஞ்சரித்து உங்கள் முயற்சியில் தடை, குடும்பத்தில் பிரச்னை, ஆரோக்கியத்தில் சங்கடம், உறவுகளிடம் பகை, இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் செல்லும் நிலையை உருவாக்கினார். இப்போது உங்கள் ராசிக்கு 7ம் இடமான மீனத்திற்கு அக்.8, 2023ல் செல்கிறார் ராகு. நட்புகளுக்கிடையே மனக்கசப்பு வரலாம். கூட்டுத் தொழிலில் சங்கடம் ஏற்படலாம். தம்பதிக்குள் பிரச்னை தோன்றலாம். வேலையில் அலைச்சல், நிம்மதியின்மை உருவாகலாம். எதிர்பாலினரால் அவப்பெயரை உருவாகலாம். திருமண முயற்சி இழுபறியாகலாம்.

கேது இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சஞ்சரித்து குடும்பத்தில் குழப்பம், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, பணநெருக்கடி, வரவில் தடை, அரசு வகையில் சங்கடம் என பலன்களை வழங்கி இருப்பார். இந்நிலையில் அக்.8, 2023 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இனம் புரியாத குழப்பங்கள் உண்டாகலாம். முயற்சியில் தோல்வி உண்டாகலாம். ஆனாலும் உங்கள் நட்சத்திர நாதனான சந்திரனுடைய கடக ராசிக்கு கேதுவின் சஞ்சார இடம் 3ம் இடம் என்பதும், கேதுவின் பின்னோக்கிய பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான கடகத்தில் பதிவதாலும் சங்கடங்கள் வந்தாலும் அதை வெற்றி கொள்ளும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். பொருளாதார நிலை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். கடவுள் சக்தி உங்கள் வாழ்வை வளமாக்கும். உங்கள் ராசிக்கு 3ம் இடத்தின் மீதும் கேதுவின் 11ம் பார்வை உண்டாவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத வருமானம் வரும். முயற்சியில் வெற்றி என்ற நிலை உண்டாகும்.

சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்குள் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை 5ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாவதுடன் அக்.20.10.2023 முதல் 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்குகள் சாதகமாகும் என்பதால் சனி பகவானின் சஞ்சாரம் கவசம்போல் பாதுகாத்து உங்கள் நிலையை உயர்த்தும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வது சாதகமான நிலை இல்லை என்றாலும், அக்.8, 2023 க்கும் டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்ரம் அடைவதும், மே1, 2024 முதல் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய குருவாக சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் முன்னேற்றம், செல்வாக்கு, புகழ், பொன், பொருள், திருமணம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் என எல்லாவித பாக்கியங்களும் உண்டாகப் போகிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை வழங்கப் போகிறார் குரு.

பொதுப்பலன்: சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு இக்காலத்தில் பொருளாதாரம் உயரும். எதிர்பார்த்தவற்றை அடையும் நிலை உண்டாகும். உடல்நிலை முன்னேற்றமடையும். எதிர்ப்புகளை இல்லாமல் செய்து நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களின் கனவு நனவாகும். திசா புத்தி நன்றாக இருந்தால் யோகம் அதிகரிக்கும்.

தொழில்: தொழிலில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்வதாலும், வரவு செலவில் கூடுதல் கவனம் செலுத்துவதாலும் நன்மை காண முடியும். கூட்டுத் தொழிலில் விழிப்பாக இருப்பது அவசியம். புதிய முயற்சிகளை மே1, 2024 க்குப்பின் மேற்கொள்வது நன்மை தரும்.

பணியாளர்கள்: அலுவலகத்தில் மற்றவரை அனுசரித்துச் செல்வதுடன் பணிகளில் முழு கவனம் வேண்டும். உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு எதிரியாகலாம். அலுவலக சூழல் காரணமாக சிலருக்கு இடமாற்றம் வரலாம். 6ம் இடச் சனியும் மே1, 2024 முதல் 9 ம் இட குருவும் நன்மைகள் தருவர்.

பெண்கள்: வாழ்க்கைத் துணையிடம் பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குடும்ப நலனிலும் பிள்ளைகள் நலனிலும், தந்தையின் நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. மனதை அலைபாய விடுவதால் தேவையற்ற சங்கடம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கையுடன் சிலர் தம் பெயரில் சொத்துகளை வாங்குவீர்கள்.

கல்வி: கல்வியில் வழக்கத்தை விட கவனம் தேவை. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். விரும்பிய பாடத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். 2024 - 25 ம் கல்வியாண்டில் கனவு நனவாகும். மதிப்பெண் அதிகரிக்கும்.

உடல்நிலை: சனியால் உடல்நிலையில் இருந்த சங்கடம் தீரும். பெரிய அளவில் அச்சுறுத்திய நோயும் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்: மேஷ குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதாலும், மே1, 2024 முதல் ரிஷப குருவின் பார்வை ஜென்ம ராசியில் பதிவதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். நிம்மதி உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவுகளின் காரணமாக பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்தால் சங்கடம் தீரும். துர்கை, விநாயகரை வழிபட நன்மை சேரும்.
சித்திரை: கடந்த ஒன்றரை ஆண்டாக 1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 8ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு 7ம் இடத்திலும் சஞ்சரித்து நெருக்கடியை உண்டாக்கியதுடன், உடல் நிலையில் சங்கடம், தொழிலில் பின்னடைவு, வருமானத்தில் தடை, குடும்பத்தில் அமைதியின்மை, நட்புகளிடம் பிரச்னைகள் என எல்லா வகையிலும் எதிர்மறை பலனையே வழங்கி வந்தார். இந்நிலையில் அக்.8, 2023 முதல் 1,2ம் பாதத்தினருக்கு 7 ம் இடத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதத்தினர் கூட்டுத் தொழில், நட்பு, வாழ்க்கைத்துணை மூலம் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த லாபம் அடைவர். ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதக முடிவு, முயற்சிகளில் வெற்றி என்ற நிலை ஏற்படும்.

கேது இதுவரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீட்டிலும் 3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து குடும்பத்தில் குழப்பம், பொருளாதார நெருக்கடி, தொழிலில் லாபமின்மை, பணியில் பிரச்னைகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாக சஞ்சரித்து காரியங்களில் தடை, உடல்நிலையில் சங்கடம், முயற்சிகளில் தோல்வி, அரசு வழியில் பிரச்னை என்ற நிலையையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண்செலவு, உடல்நிலையில் பாதிப்பு, மனக்குழப்பம், அலைச்சல், தம்பதிகளுக்குள் சங்கடம் என்ற நிலையையும் உண்டாக்க உள்ளார்.

சனி சஞ்சாரம்: மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 5ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாவதுடன் அக்.20, 2023 முதல் 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.20, 2023 வரை 4 ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்ர நிவர்த்தியாவதுடன் டிச.20, 2023 முதல் 5 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகமான நிலையையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம், குடும்பம், தொழிலில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 8ம் இடத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்திலும் குரு சஞ்சாரம் செய்வதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடத்தையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகமான பலன்களையும் வழங்குவார். அக்.8, 2023 முதல் டிச.20,.2023 வரை அவர் வக்ரம் அடைவதால் இந்த பலன்கள் உண்டாகாது. மே1, 2024 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய குருவாக அதிர்ஷ்ட பலன்களையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டம குருவாக பாதக பலன்களையும் வழங்குவார்.

பொதுப்பலன்: 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு டிச.20, 2023 முதல் சனியும், மே1, 2024 முதல் குருவும் தொழில், பணி, குடும்பம், வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை வழங்குவர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதும், சப்தம ஸ்தானத்தில் இருந்து 6 ம் இடத்திற்கு ராகு செல்வது நன்மை தரும். ஆற்றல் வெளிப்படும். பகை விலகும். நோய் நொடி நீங்கும், வழக்குகள் வெற்றியாகும். ஏப்.30, 2024 வரை குருவின் பார்வை இருப்பதால் நினைத்தது நிறைவேறும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

தொழில்: திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் காண முடியும். போட்டியாளர்கள் பலமிழப்பர். புதிய முயற்சிகள் வெற்றி தரும். அரசு வழியில் உண்டான தடைகள் விலகும். பேக்டரி, கம்பெனி தொடங்க நினைத்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு முதலாளியின் ஆதரவு அதிகரிக்கும். பேக்டரி, ஆட்டோமொபைல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா துறைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்த நன்மையை அடைவர்.

பெண்கள்: ஒரு நேரம் லாபம் மறு நேரம் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உண்டாகும், உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் நிறைவேறும், எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பதால் கவுரவம் பாதுகாக்கப்படும். பணிபுரியும் இடத்தில் சகஊழியரிடம் குடும்ப ரகசியங்களை தெரிவிக்க வேண்டாம். திருமண வயதினருக்கு சுபநிகழ்ச்சி நடக்கும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு பாக்கியம் உண்டாகும்.

கல்வி: படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வர். மருத்துவம், பொறியியல், ஐ.டி கனவுகள் நிறைவேறும்.

உடல்நிலை: சனி, ராகுவால் ஆரோக்கியம் மேம்படும், பெரிய அளவில் அச்சுறுத்தி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும், பரம்பரை நோய்களின் வீரியம் குறைவதுடன் சிகிச்சையால் கட்டுப்படும். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலை சீராகும்.

குடும்பம்: குருவின் ஸ்தான, பார்வை பலத்தால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும், பொருளாதாரம் மேம்படும், பொன் பொருள் சேரும். வீடு வாகன வசதியும் உண்டாகும், பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணக் கனவு நிறைவேறும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை கூடும்.

பரிகாரம்: சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரகங்களை வழிபட்டு ஆதரவற்றோருக்கு உணவு, உடை தானம் செய்தால் நன்மை பெருகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement