Load Image
Advertisement

துலாம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

சித்திரை: ஆரோக்கியம் மேம்படும்

கடந்த ஒன்றரை ஆண்டாக 1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 8ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு 7ம் இடத்திலும் சஞ்சரித்து நெருக்கடியை உண்டாக்கியதுடன், உடல் நிலையில் சங்கடம், தொழிலில் பின்னடைவு, வருமானத்தில் தடை, குடும்பத்தில் அமைதியின்மை, நட்புகளிடம் பிரச்னைகள் என எல்லா வகையிலும் எதிர்மறை பலனையே வழங்கி வந்தார். இந்நிலையில் அக்.8, 2023 முதல் 1,2ம் பாதத்தினருக்கு 7 ம் இடத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதத்தினர் கூட்டுத் தொழில், நட்பு, வாழ்க்கைத்துணை மூலம் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த லாபம் அடைவர். ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதக முடிவு, முயற்சிகளில் வெற்றி என்ற நிலை ஏற்படும்.

கேது இதுவரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீட்டிலும் 3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து குடும்பத்தில் குழப்பம், பொருளாதார நெருக்கடி, தொழிலில் லாபமின்மை, பணியில் பிரச்னைகளை ஏற்படுத்தினார். இந்நிலையில் 1,2 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாக சஞ்சரித்து காரியங்களில் தடை, உடல்நிலையில் சங்கடம், முயற்சிகளில் தோல்வி, அரசு வழியில் பிரச்னை என்ற நிலையையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண்செலவு, உடல்நிலையில் பாதிப்பு, மனக்குழப்பம், அலைச்சல், தம்பதிகளுக்குள் சங்கடம் என்ற நிலையையும் உண்டாக்க உள்ளார்.

சனி சஞ்சாரம்: மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 5ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாவதுடன் அக்.20, 2023 முதல் 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.20, 2023 வரை 4 ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்ர நிவர்த்தியாவதுடன் டிச.20, 2023 முதல் 5 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகமான நிலையையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம், குடும்பம், தொழிலில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 8ம் இடத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்திலும் குரு சஞ்சாரம் செய்வதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடத்தையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகமான பலன்களையும் வழங்குவார். அக்.8, 2023 முதல் டிச.20,.2023 வரை அவர் வக்ரம் அடைவதால் இந்த பலன்கள் உண்டாகாது. மே1, 2024 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய குருவாக அதிர்ஷ்ட பலன்களையும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டம குருவாக பாதக பலன்களையும் வழங்குவார்.

பொதுப்பலன்: 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு டிச.20, 2023 முதல் சனியும், மே1, 2024 முதல் குருவும் தொழில், பணி, குடும்பம், வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை வழங்குவர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதும், சப்தம ஸ்தானத்தில் இருந்து 6 ம் இடத்திற்கு ராகு செல்வது நன்மை தரும். ஆற்றல் வெளிப்படும். பகை விலகும். நோய் நொடி நீங்கும், வழக்குகள் வெற்றியாகும். ஏப்.30, 2024 வரை குருவின் பார்வை இருப்பதால் நினைத்தது நிறைவேறும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

தொழில்: திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் காண முடியும். போட்டியாளர்கள் பலமிழப்பர். புதிய முயற்சிகள் வெற்றி தரும். அரசு வழியில் உண்டான தடைகள் விலகும். பேக்டரி, கம்பெனி தொடங்க நினைத்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு முதலாளியின் ஆதரவு அதிகரிக்கும். பேக்டரி, ஆட்டோமொபைல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா துறைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்த நன்மையை அடைவர்.

பெண்கள்: ஒரு நேரம் லாபம் மறு நேரம் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உண்டாகும், உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் நிறைவேறும், எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பதால் கவுரவம் பாதுகாக்கப்படும். பணிபுரியும் இடத்தில் சகஊழியரிடம் குடும்ப ரகசியங்களை தெரிவிக்க வேண்டாம். திருமண வயதினருக்கு சுபநிகழ்ச்சி நடக்கும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு பாக்கியம் உண்டாகும்.

கல்வி: படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வர். மருத்துவம், பொறியியல், ஐ.டி கனவுகள் நிறைவேறும்.

உடல்நிலை: சனி, ராகுவால் ஆரோக்கியம் மேம்படும், பெரிய அளவில் அச்சுறுத்தி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும், பரம்பரை நோய்களின் வீரியம் குறைவதுடன் சிகிச்சையால் கட்டுப்படும். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலை சீராகும்.

குடும்பம்: குருவின் ஸ்தான, பார்வை பலத்தால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும், பொருளாதாரம் மேம்படும், பொன் பொருள் சேரும். வீடு வாகன வசதியும் உண்டாகும், பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணக் கனவு நிறைவேறும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை கூடும்.

பரிகாரம்: சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரகங்களை வழிபட்டு ஆதரவற்றோருக்கு உணவு, உடை தானம் செய்தால் நன்மை பெருகும்.

சுவாதி: எதிர்பார்ப்பு நிறைவேறும்

கடந்த ஒன்றரை ஆண்டாக ராகு 7ம் இடமான மேஷ ராசியில் சஞ்சரித்து வாழ்வின் மீது வெறுப்பை உண்டாக்கினார், வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடும், தொழிலில் திருப்தியற்ற நிலையும் தொடர்ந்தது. இப்போது உங்கள் ராசிக்கு 6ம் இடமான மீனத்திற்கு அக்.8, 2023ல் செல்வதால் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகள் சாதகமாகும், போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழில், வியாபாரத்தில் பிரச்னை விலகும். வருவாய் அதிகரிக்கும். சுபவிஷயத்தில் தடை விலகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். ஆறாமிடத்து ராகு ஆற்றலை அதிகரிப்பார். வருவாயை உயர்த்துவார். வெற்றியை ஏற்படுத்துவார்.

கேது இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து குடும்பத்தில் நிம்மதியின்மை, தொழிலில் பாதிப்பு, உறவினரிடம் விரோதத்தை உண்டாக்கினார். இந்நிலையில் அக்.8, 2023 முதல் விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொலைதுார பயணம், செலவு அதிகரிக்கும். சின்ன விஷயத்திற்கும் பெரிய அளவில் பயம் உண்டாகும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். பொன் பொருளை விற்று கடனை அடைக்க நினைத்தாலும் அதிலும் நஷ்டமே ஏற்படும். கேதுவின் பின்னோக்கிய 7ம் பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறும் நிலை உண்டாகும்.

சனி சஞ்சாரம்: 6ம் இடத்தில் ராகுவும், 12ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலத்தில் அக்.23, 2023 வரை 4ம் இடத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்ர நிவர்த்தி ஆவதுடன் டிச.20, 2023 முதல் 5ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார்.
குடும்பத்தில் பிரச்னை, தம்பதி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தடங்கல், மேலதிகாரியின் விரோதம், நண்பர், உறவினருடன் கருத்து வேறுபாடு, வீண்செலவு, பிள்ளைகளால் வருத்தம், குலதெய்வம், குடும்ப தெய்வம் என தேடிச் செல்லும் சூழ்நிலை உண்டாகும். நிலையான எண்ணமும் திடபுத்தியும் இல்லாமல் போகும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2023 வரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் குரு சஞ்சரித்து சாதகமான பலன்களை வழங்கி வந்தாலும், அக்.8, 2023 க்கும் டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்ரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். நெருக்கடி தோன்றும் என்றாலும் அதன் பிறகு மீண்டும் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பொன் பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மே1, 2023 முதல் 8ம் இடத்தில் அஷ்டம குருவாக சஞ்சரித்து பலன்களை வழங்க இருக்கிறார், ஒருவரிவன் ராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் சங்கடம், நெருக்கடி தோன்றும். ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் போது தீராதநோய், பகை, செலவு, வழக்குகள், கடன் தொல்லை, சண்டை சச்சரவு ஏற்படலாம்.

பொதுப்பலன்: எப்போதும் கவனமாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு இக்காலத்தில் அதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை இல்லாமல் செய்து, எடுத்த செயலில் வெற்றி அடைவீர்கள். சமூக மதிப்பு, மரியாதை அதிகரிக்கும், வீட்டிற்கு தேவையான நவீன சாதனம் வாங்குவீர்கள். சிலர் இடம் வாங்கி, வீடு கட்டி குடியேறுவீர்கள். ஏப்.30, 2024 வரை வீட்டிற்குள் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.

தொழில்: விவசாயம், கால்நடை வளர்ப்பு, மருத்துவம், எலக்ட்ரானிக், மின் கருவிகள், கம்ப்யூட்டர்கள், கட்டுமான பொருட்கள், வாகனங்கள், ஆட்டோ மொபைல்ஸ், டூரிஸ்ட், டிராவல்ஸ், சினிமா, டிவி போன்ற தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும், லாபம் அதிகரிக்கும்,

பணியாளர்கள்: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும். சம்பள உயர்வு உண்டாகும், மேலதிகாரிகளால் அனுகூலம் அதிகரிக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உயர்வு உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்கள்: உடலில் இருந்த சங்கடம் விலகி ஆரோக்கியத்துடன் செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் உண்டானாலும் அதை சமாளிப்பீர்கள், எதிர்ப்பு விலகி எதிர்பார்ப்பு நிறைவேறும், அலுவலகத்தில் பணிபுரிவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சுயதொழில் புரிவோர் முன்னேற்றம் அடைவீர்கள். பொன் பொருள் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.

கல்வி: ஏப்.30, 2024 வரை படிப்பில் கவனம் அதிகரிக்கும், அதன்பின் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்று தேர்ச்சி பெறுவீர்கள். உயர் கல்விக்காக சிலர் வெளி மாநிலம், வெளி நாடு என்று செல்வீர்கள்.

உடல்நிலை: நீண்ட நாளாக அச்சுறுத்திய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும், இயற்கை வைத்தியத்தால் பரம்பரை நோய்கள் கட்டுப்படும்.

குடும்பம்: ஏப்.30, 2024 வரை மேஷ குருவால் வருமானம் அதிகரிக்கும், பொன் பொருள் சேரும், புதிய வீடு கட்டி குடியேறும் கனவு நிறைவேறும். சிலருக்கு புதிய தொழில் அமையும், திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். மே 1, 2024 முதல் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் சங்கடங்கள் விலகும். வருமானம் உயரும். உறவுகளுடன் ஒற்றுமை உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும்

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு விளக்கேற்றியும், செவ்வாயன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தியும் வழிபட பிரச்னை தீரும்.
விசாகம்: குருபகவானை நட்சத்திர நாதனாக கொண்ட உங்களுக்கு அக்.8, 2023ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது?

இதுவரை ராகு 1,2,3 ம் பாதத்தினருக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தொழில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், தீயோர் சேர்க்கை, உடல்நிலையில் திருப்தியின்மையை உண்டாக்கி வந்தார். 4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றம், லாபம், செயலில் வெற்றியை வழங்கினார். இனி 1,2,3 ம் பாதத்தினருக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்து நன்மை வழங்குவார், உடல் நிலையில் இருந்த சங்கடம் போகும். எதிரி பலம் இழப்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான நிலை உண்டாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும், வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வீர்கள். 4ம் பாதத்தினருக்கு ஒரு பக்கம் தகுதி குறைந்தவர்களால் அவமானத்திற்கு ஆளாவதுடன் பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவர். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். கணவன், மனைவி உறவிலும் ஒற்றுமை இல்லாமல் போகும். ஆனாலும் மனதில் தெளிவு உண்டாகும். தொழிலில் முயற்சியும், ஆர்வமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும், தடைபட்ட முயற்சி வெற்றியாகும்.

கேது இதுவரை 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாக சஞ்சரித்து, குடும்பத்தில் சங்கடம், வீண் பிரச்னை, எதிர்பாராத விபத்து, ஆரோக்கிய குறைபாடு, இனம் புரியாத அச்சம், தொழில் பாதிப்பு, உறவினரிடம் மனக்கசப்பு என்று வழங்கி வந்தார். 4ம் பாதத்தினருக்கு விரய கேதுவாக சஞ்சரித்து குழப்பம், வீண்செலவு, பணத்தட்டுப்பாடு, தொழிலில் பின்னடைவு, வழக்கு, கடன், நஷ்டம் என பாதக பலன்களை வழங்கினார். இனி 1,2,3ம் பாதத்தினருக்கு விரய கேதுவாக சஞ்சரித்து வீண் செலவை உண்டாக்குவார், நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். சங்கடங்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு லாப கேதுவாகி, அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மனதில் துணிச்சல் உடலில் ஆரோக்கியம் உண்டாகும்.

சனி சஞ்சாரம்:
மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளிலிருந்து அக்.23, 2023 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 4ம் இடத்தில் வக்கிர கதியாக சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி டிச.20, 2023 முதல் 5ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 4ம் பாதத்தினருக்கு அக்.23, 2023 வரை 3ம் இடத்தில் வக்கிர கதியாக சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தி ஆவதுடன் டிச.20, 2023 முதல் 4ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் இக்காலத்தில் இடையூறு, குடும்பத்தில் பிரச்னை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தடை, வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, தாயின் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.

குரு சஞ்சாரம்:
ஏப்.30, 2024 வரை 1,2,3ம் பாதத்தினருக்கு 7ம் இடத்திலும், 4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் குரு சஞ்சாரம் செய்வதால், 1,2,3 பாதத்தினருக்கு யோகமான பலன்களையும், 4ம் பாதத்தினருக்கு சங்கடமான பலன்களையும் வழங்குவார். என்றாலும் அக்.8, 2023 க்கும் டிச.20,2023 க்குமான காலத்தில் அவர் வக்கிரம் அடைவதால் பலன்கள் மாறுபடும். மே1, 2024 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு அஷ்டம குருவாக சங்கடமான பலன்களையும், 4ம் பாதத்தினருக்கு சப்தம குருவாக யோக பலன்களை வழங்குவார்.

பொதுப்பலன்:
1,2,3ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவும், ஏப்.30, 2024 வரை குருவும் யோகப் பலன்களை வழங்குவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு அதிகரிக்கும். வருமானம் கூடும், வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், மே1, 2024 முதல் 7 ம்இட குருவும் யோகப் பலன்களை வழங்குவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் லாபம் அதிகரிக்கும்.

தொழில்: விவசாயம், பண்ணைகள், ஆன்மிகவாதிகள், ஞானிகள், ஆலோசகர்கள், ஜோதிடர்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பதிப்பகங்கள், ரியல் எஸ்டேட், சினிமா, டி.வி, கெமிக்கல், ஓட்டல், கட்டுமான நிறுவனம், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் திறமை வெளிப்படும். முதலாளியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும்.

பெண்கள்: தனித்திறமை வெளிப்படும். ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்ப பிரச்னை தீரும். உடல் நிலை பாதிப்பு விலகும். பொருளாதாரம் உயரும். பொன் பொருள் சேரும்.

கல்வி: படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று மேற்கல்விக்கு செல்வீர்கள்.

உடல்நிலை: உடலில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாள் நோய் கூட மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். உடலிலும் மனதிலும் வலிமை உண்டாகும்.

குடும்பம்: வாழ்வில் வசந்தம் வந்தது போல் தோன்றும். நன்மை அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். சிலர் வீடு கட்டி குடியேறுவர். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: ஜென்ம நட்சத்திரத்தன்று ஆலங்குடி குருபகவானை வழிபடுங்கள். ராகு காலத்தில் பிரத்யங்கிரா தேவிக்கு அர்ச்சனை செய்ய நன்மை அதிகரிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement