Load Image
Advertisement

விருச்சிகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

விசாகம்; நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்

தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு களத்திரக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரகாரகனான செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். கோச்சார ரீதியாக சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தரக் கூடியவராகிறார்.

விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் 5ம் இடத்திலும், 4ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள் தோன்றி அதையெல்லாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குறிப்பாக குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு அதன் வழியாக குழப்பம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே பிரச்னைகள் தோன்றும், பூர்வீக சொத்துகளில் வழக்கு, வில்லங்கம் போன்றவை ஏற்படுவதுடன் பிள்ளைகளாலும் சங்கடங்களை அடைய வேண்டும் என்பது பொதுவான விதி. 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல், இழுபறி. தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு, மனரீதியாக நெருக்கடி, வீண் விரோதம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையை ஏற்படுத்தலாம் என்பது பொதுப்பலன்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 மற்றும் நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோகமான பலன்களை வழங்கி முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். உடல் நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். எதிர்ப்புகளை விலக்கி வைப்பார். 4ம் பாதத்தினருக்கு 11ம் இட கேதுவால் தொட்டதெல்லாம் வெற்றியாகும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். ஏப் 26, 2025க்கு பிறகு 1,2,3ம் பாதத்தினருக்கு 11ம் இட கேது அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிப்பார். பணம் பலவழிகளிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை சப்தம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குருபகவான். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற அருள்புரிவார். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலையில் முன்னேற்றத்தையும், அந்தஸ்தையும், பொன் பொருள் சேர்க்கையையும் உண்டாக்குவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1, 2024 - மே 13, 2025 வரை நினைத்த காரியங்களில் வெற்றியையும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளையும், வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலையையும், இளம் வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பண வரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் ராகு, கேது, குரு பகவானின் சஞ்சாரங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகன சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றியை ஏற்படுத்தும்.

தொழில்
தொழிலில் போட்டி, பிரச்னைகள் என்று இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை கண்டறிந்து அதில் உங்கள் முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். மற்றவர்களால் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழில் ஆதாயத்தை அளிக்கும்.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

பெண்கள்
அலுவலகப் பணியில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

கல்வி
படிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டால் தேர்வில் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடத்தில் சேரும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
நோய்களால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்க்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தி வருவதும், சிகிச்சைப் பெருவதும் இக்காலத்தில் நன்மை தரும்.

குடும்பம்
குடும்ப நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்; திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வு வளமாகும். நாளும் நலம் சேரும்.

அனுஷம்; எதிர்பார்ப்பு நிறைவேறும்

ஆயுள்காரகனான சனிபகவானை நட்சத்திர நாதனாகவும், சகோதரகாரனான செவ்வாய் பகவானை ராசிநாதனாகவும் கொண்டு பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் சுகஸ்தானமான 4ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.

சனிபகவான் உங்கள் நட்சத்திர நாதன் என்றாலும் உங்கள் ராசிநாதனுக்கு அவர் பகையானவர். கோச்சார ரீதியாக அவர் எந்த இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த இடத்திற்குரிய பலன்களை ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவர்.

4ம் வீடான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் வீண் விரோதத்தை உண்டாக்குவார். பலவழிகளிலும் உங்களை அலைகழிப்பார். உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக மனக்கவலையை அதிகரிப்பார். சிலருக்கு தாயுடனும், தாய் வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்படலாம். வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லைகளும், உற்றார் உறவினர்களுடன் பகையும் ஏற்படுவதுடன், தொழிலிலும், பணியிலும் சங்கடம், நஷ்டம், பிரச்னைகள் என்று உண்டாகும். என்றாலும் இது பொதுவான விதிதான். சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை வைத்தும், திசா புத்தியின் அடிப்படையிலும், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளாலும் பலன்களில் மாறுதல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ 17, 2025 - மார்ச் 6, 2006 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். வழக்கமான முயற்சிகள் தடை இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகளை எல்லாம் சமாளிக்கும் சக்தி ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் லாப ஸ்தான கேதுவால் இதுநாள் வரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் காணாமல் போகும். உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு, வாகனம், பொன், பொருள், அந்தஸ்து ஆகியவற்றை அடைவீர்கள். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் பாதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை உருவாகி சங்கடத்திற்கு ஆளாக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உடல் நிலையில் சில சங்கடம் ஏற்படும். பணவரவிலும் தடை உண்டாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் சங்கடத்தில் இருந்து தப்பலாம். மே 1, 2024 - மே13, 2025 காலத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அலுவலகத்தில் பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும். மே 14, 2025 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழிலில் சங்கடம் தோன்றும். செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும். உங்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கூட விலகிச் செல்வர். பொருளாதார ரீதியாக சங்கடம் அதிகரிக்கும். உடல், மனம், தொழில், வாழ்க்கை என எல்லாவற்றிலும் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

பொதுப்பலன்
அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சிகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ அருளால் நன்மை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நீண்டநாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள், கலைஞர்களுக்கு இது சுமாரான காலமாக இருக்கும். என்றாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

தொழில்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய கிளைகள் தொடங்கி வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அரசாங்க ரீதியாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், ஓட்டல், விவசாயம், பில்டர்ஸ், கமிஷன் வியாபாரம், இயந்திர தொழிற்சாலைகள், ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவாக இருப்பர். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சிலருக்கு விரும்பிய இட,பணி மாற்றம், பதவி உயர்வும் உண்டாகும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையின் அன்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத் தேடிடுபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். அரசு, தனியார் நிறுவன பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சலுகைகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர். பொதுதேர்வில், போட்டித் தேர்வில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
உடல்நிலை ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இருக்காது. சிலருக்கு தொற்று நோய், பரம்பரை நோய் என பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவரை நாடும் நிலை ஏற்படும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனத்தை செலுத்துவது அவசியம்.

குடும்பம்
அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்றாலும் இக்காலத்தில் ராகு, கேதுவின் சஞ்சாரமும், குருவின் ஸ்தான, பார்வைகளின் பலன்களும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விரோதிகளின் தொல்லைகள் விலகும். தொழில் வளர்ச்சி ஏற்படும். அதன் காரணமாக பண வரவு அதிகரித்து குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை என விருப்பங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: திருநள்ளாறு சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்து வணங்க சங்கடம் தீரும்.
கேட்டை; எச்சரிக்கை அவசியம்

வித்யாகாரகனான புதன், சகோதர காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் 4ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான். இவர் உங்கள் ராசிநாதனுக்கு பகையானவர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு நட்பானவர். சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவரின் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவர்.

4ம் வீடான சுக ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பணியில் சங்கடங்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். ஏதாகிலும் ஒரு பிரச்சினை உண்டாகிக் கொண்டே இருக்கும். அதை சமாளித்து வெளியில் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உடல் நிலையிலும் சில சங்கடம் தோன்றும். எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறிப் போவீர்கள். இவையெல்லாம் பொதுப் பலன்தான். இப்பலன்களில் உங்களுடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் 4ம் இட சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூரில் வசிக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 11ம் இட கேதுவால், உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் போகும். நெருக்கடி விலகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய பொறுப்பு, பதவி, அந்தஸ்து என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏப், 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் இழுபறியாகும். உடல்நலனிலும் பாதிப்பு உண்டாகும். மனதில் சோர்வு ஏற்பட்டு அதனால் உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சங்கடம் உண்டாகும். வீண் பிரச்னை உங்களைத் தேடி வரும். மே 1, 2024 - மே13, 2025 வரையிலும் 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கனவு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். மே 14, 2025 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உடல்நிலை, மனநிலை போன்றவற்றில் சங்கடம்அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். வருமானம் தடைபடும். உங்களுடன் இருந்தவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். உங்கள் செல்வாக்கிற்கு இது ஒரு சோதனைக் காலம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பொதுப்பலன்
உழைப்பு அதிகரித்தாலும் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப நிலையை உயர்த்துவதற்கு முயற்சி செய்வீர்கள். நீண்டநாள் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் இக்காலத்தில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும்.

தொழில்
சுயதொழில் செய்வோரின் முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானம் உயரும். ஷேர் மார்க்கட்டிங்கில் அதிகளவு ஆதாயம் உண்டாகும். பப்ளிகேஷன், பத்திரப்பதிவு, விவசாயம், இயந்திர நிறுவனங்கள், ஆன்லைன் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
தனியார் நிறுவன பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் பணியிடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள்
கல்வி, வேலை, திருமணம் என எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். நிறைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதன் காரணமாக உடல்நலனில் சில பாதிப்பு உண்டாகும். சுயதொழில் செய்வோருக்கு உழைப்பும் முதலீடும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு பலத்தை உண்டாக்கும். கணவரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் மறையும்.

கல்வி
படிப்பில் கவனம் செல்லும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். அவ்வப்போது நண்பர்களால் கவனம் சிதறும். அதனால் வீண் அரட்டை, ஜாலி என்பதை விட்டு விட்டு தேர்வின் அவசியத்தை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

உடல்நிலை
4ம் இட சனியால் உடல்நிலையில் பாதிப்புண்டாகும். என்றாலும், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலையின் காரணமாக அவற்றிலிருந்து நிவாரணம் உண்டாகும். இக்காலத்தில் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், ரகசிய நோய்களால் சங்கடம் உண்டாக வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன் அதற்குரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.

குடும்பம்
அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்றாலும் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதார நிலை உயரும். வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றில் தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றியாகும். குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு கூடும்.

பரிகாரம்; நரசிம்மரை வணங்க வாழ்வில் நன்மை அதிகரிக்கும். நிம்மதி நிலைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement