Load Image
Advertisement

தனுசு : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

மூலம்; சனிதோஷம் இனி இல்லை

ஞானக்காரகனான கேது பகவான், தனகாரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் 3ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் கடந்தகாலத்தில் ஏற்பட்ட சனிதோஷம் இனி இருக்காது.
இதுவரையில் உங்கள் ராசிக்கு குடும்பம், வாக்கு ஸ்தானமான 2ம் வீட்டில் ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனியாய் சஞ்சரித்த சனிபகவான் உங்களுக்கு பல வழிகளிலும் சங்கடத்தை வழங்கி வந்தார். நீங்கள் தொட்டதெல்லாம் தோல்வியாக இருந்தது. விரயத்திற்கு மேல் விரயமானது. இழப்புகளும் அதிகமானது.

இந்நிலையில் 3ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள சனியால் தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை அமையும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இட மாற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். எதிரிகளை அடக்கி வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிக்கு கூடுதல் பணம் செலவாகும். சிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் தொட்டது துலங்கும். லாபம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இடம், பூமி, வாகனம் வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி வந்து சேரும். கலைஞர்களுக்கு இக்காலம் யோகமான. காலமாக இருக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். உத்தியோகத்தில், தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியதாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் சில சங்கடங்கள் ஏற்படும். ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அரசு விவகாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும். மற்றவர்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். குலதெய்வ அருளால் உங்கள் நிலை உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் 6 ம் இடத்து குருவால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சங்கடங்கள் ஏற்படும். வீண் பிரச்னைகள் தேடி வரும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திக்க நேரும். மே 14, 2025 முதல் 7ல் சஞ்சரிக்கும் குருவால் பிரச்னைகள் விலகும். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு விருப்பம் நிறைவேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும்.

பொதுப்பலன்
முன்பிருந்த நெருக்கடி, சங்கடம் முழுமையாக விலக ஆரம்பிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். இழப்புகளிலிருந்து கற்ற பாடங்களின் வழியாக திடசிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும்.

தொழில்
நஷ்டத்தில் இயங்கிய தொழில் இனி லாபத்தில் செல்லும். உங்களுடைய முயற்சியும் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபத்தை உண்டாக்கும்.

பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. உழைத்தாலும் அதற்குரிய மரியாதை இல்லை என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பும், சம்பள உயர்வும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு இக்காலம் யோகமான காலமாக இருக்கும்.

பெண்கள்
உறவுகளால் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, பெரிய இழப்புகள் என்பதையெல்லாம் சந்தித்து ஒரு நிலைக்கு வந்திருக்கும் உங்களுக்கு, இனி யோகபலன் உண்டாகும். விருப்பப்படி செயல்பட்டு வாழ்க்கையை நடத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவர். புதிய சொத்து, வாகனம் வாங்குதல் போன்ற எண்ணம் நிறைவேறும். இழந்ததை மீட்டெடுக்கும் காலமாக இக்காலம் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும்.

கல்வி
படிப்பிலிருந்த தேக்கநிலை மாறும். மனதில் தெளிவான சிந்தனை உண்டாகும். அதனால் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டு பொதுத்தேர்வில் சாதனை புரிவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

உடல்நிலை
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு இக்காலத்தில் அதில் இருந்து விடுதலை உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். நோய்கள் உண்டானாலும் மருத்துவ சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

குடும்பம்
இதற்கு முன்பிருந்த சங்கடம் யாவும் விலக ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் சென்று குடும்பத்தைக் கொண்டு செல்வீர்கள். தடைபட்ட முயற்சிகள் யாவும் வெற்றியாகும். சிலர் புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள். விரும்பிய மாற்றங்கள் இக்காலத்தில் ஏற்படும். சிலர் பிள்ளைகளின் செயல்களால் சங்கடத்திற்கு ஆளாவர்.

பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை ஒருமுறை தரிசித்து வாருங்கள். குறை யாவும் தீரும்.
பூராடம்; சிறப்பான காலகட்டம்

களத்திரக்காரகனான சுக்கிரன், தனகாரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச. 20, 2023 முதல் தைரிய வீரிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.

உங்கள் வாழ்க்கையில் சில ஆண்டுகளாகவே ஏராளமான சங்கடம், சிக்கல், போராட்டங்கள் இருந்திருக்கும். இந்நிலையில் 3ம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கப் போகிறார். இக்காலம் உங்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

இத்தனை நாளும் ஏழரை சனியின் பிடியில் இருந்த நீங்கள் இப்போது விடுபட்டு நிம்மதி காண்பீர்கள். முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ. 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் தாரா பலன்களினால் அதிகபட்ச நன்மைகளை அடைவீர்கள். உங்கள் வாழ்வில் இது முன்னேற்றமான காலமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆதாயநிலை ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு, அந்தஸ்து ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். அதன் காரணமாக புதிய வீடு கட்டி குடியேறுவது, வாகனம் வாங்குவது, பிறருக்கு உதவுவது என இக்காலம் மற்றவர்களால் பாராட்டும்படி இருக்கும்.

ராகு- கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் செல்வாக்கு உயரும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வீர்கள். பெரியோரின் ஆசிர்வாதம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 5ல் சஞ்சரிக்கும் குருவால் குலதெய்வ அருள் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் விலகும். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறி தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் 6ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். உடல் நிலையிலும் சங்கடம் ஏற்படும். எதிர்ப்பு வலுக்கும். எங்கு சென்றாலும் போட்டி, பிரச்னை என்ற நிலை ஏற்படும். மறைமுக எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க நேரும். மே 14, 2025 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், மீண்டும் வாழ்வில் பிரகாசம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களால் மதிக்கும் நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பொதுப்பலன்
போராட்டம், பிரச்னைகள் என்ற நிலை மாறும். செயல்கள் இனி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். கடந்தகால பிரச்னைகளை சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் அதிகரிக்கும். உழைப்பும் முயற்சியும் வெற்றியை உண்டாக்கும்.

தொழில்
3ல் சஞ்சரிக்கும் சனியால் தொழிலில் தடைகள் விலகும். எதிர்பார்த்த வளர்ச்சியை இக்காலத்தில் பெறலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உங்கள் தனித்திறனால் புதிய ஒப்பந்தம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். இயந்திரத்தொழில், விவசாயம், கால்நடை, வாகன உற்பத்தி, வாகன விற்பனை, கலைத்துறை, அச்சுத்தொழில் லாபமடையும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு. வேலையில் பிரச்னை என்ற நிலையிலிருந்து மாறுதல் உண்டாகும். உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். சம்பள உயர்வும், புதிய பொறுப்பும் உண்டாகும். முதலாளிகள் உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். இதுவரை சோர்வு கண்டிருந்த மனம் இனி சுறுசுறுப்படையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வேலைத்தேடியவர்களுக்கு வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுயதொழில் செய்வோரின் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் இருந்த சங்கடம் விலகி செல்வாக்கு தோன்றும்.

கல்வி

படிப்பில் ஆர்வம் உண்டாகும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு போன்றவற்றில் ஆசிரியர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டு கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். சிலருக்கு மேல் கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
பரம்பரை நோய் மறைமுகநோய் என்ற தொந்தரவுகள் உண்டாகும் என்றாலும், சிகிச்சைக்கு அவை கட்டுப்படும். விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறுபவர்கள் இனி எழுந்து நடமாடுவர். மூன்றாம் இட சனியின் சஞ்சாரத்தால் ஆரோக்கியம் சீராகும். உடல் நலனில் இருந்த சங்கடங்கள் விலகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகளின் மேல்படிப்பு, வேலை, தொழில், திருமணம் என கவலைப்பட்டவர்கள் மனம் ஒன்றீி வழிபட விருப்பம் நிறைவேறும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். பெரியவர்களின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினரிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்; ராகு காலத்தில் துர்கை வழிபாடு, சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது நன்மை தரும்.

உத்திராடம்; நினைத்த செயலில் வெற்றி

ஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரிய பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, தனகாரகனான குருபகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனிபகவான் ராசிநாதனாகவும் உள்ளனர். கோச்சார ரீதியாக சனி சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.

உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 3 ம் இடத்திலும் 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவார். தொழிலில் முன்னேற்றம், சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த செயலில் வெற்றி, சமுதாயத்தில் அந்தஸ்து பெறும் நிலை உண்டாகும். இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றலை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம், முயற்சிகளில் பின்னடைவு, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல்பாதிப்பு. எதிர்பாராத விபத்து போன்றவற்றை உண்டாக்குவார். இவையெல்லாம் சனி பகவானின் சஞ்சாரத்தால் ஏற்படும் பொதுப் பலன்கள்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலங்களிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்கள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். 2ம் இட சனியால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து விடுதலை உண்டாகும். நெருக்கடி விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப்.26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவர். தொழிலில் தடைகளையும் எதிர்பார்த்த வருமானத்தில். இழுபறியையும் உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை ஏற்படுத்துவர். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். ஏப்.26, 2025க்கு பிறகு 1ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவும் பாக்ய ஸ்தான கேதுவும் நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலையை உண்டாக்குவர். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவும், 8ம் இட கேதுவும் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் மந்தம், வீண் அலைச்சல், சிலருக்கு தொழிலை மாற்றும் நிலை, உடல் பாதிப்பு, பண வரவில் தடை, வீண் சங்கடம், எதிர்பாராத விபத்துகளை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, 2024 வரை 5ம் ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 6ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 7ம் ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குருபகவான். 5,6 ம் ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் போது வாழ்வில் முன்னேற்றம், பொன் பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் தொடங்கும் முயற்சி, பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் என்ற நிலையையும், சமுதாயத்தில் அந்தஸ்தையும் வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1, 2024 - மே 13, 2025 வரையிலும் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள்வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.

பொதுப்பலன்
சனி பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இல்லையென்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலை வாழ்க்கையை வளமாக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். வருமானத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமையை ஏற்படுத்தும். தொழிலில் ஏற்படும் தடைகளை விலக்கி வைக்கும். பணியில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கையை உண்டாக்கும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும். உங்கள் முயற்சியின் காரணமாக லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
உங்கள் தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அதற்காக ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். மேற்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
உடல் நிலையில் சில பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதி சற்று குறையும். யோகா, தியானத்தால் தீர்வு காண முடியும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறைகளாலும் நிவாரணம் உண்டாகும்.

குடும்பம்
சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்; சிதம்பரம் நடராஜரை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும். நிம்மதி கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement