Load Image
Advertisement

மகரம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

உத்திராடம்;நினைத்த செயலில் வெற்றி

ஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரிய பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, தனகாரகனான குருபகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனிபகவான் ராசிநாதனாகவும் உள்ளனர். கோச்சார ரீதியாக சனி சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.

உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 3 ம் இடத்திலும் 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவார். தொழிலில் முன்னேற்றம், சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த செயலில் வெற்றி, சமுதாயத்தில் அந்தஸ்து பெறும் நிலை உண்டாகும். இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றலை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம், முயற்சிகளில் பின்னடைவு, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல்பாதிப்பு. எதிர்பாராத விபத்து போன்றவற்றை உண்டாக்குவார். இவையெல்லாம் சனி பகவானின் சஞ்சாரத்தால் ஏற்படும் பொதுப் பலன்கள்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலங்களிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்கள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். 2ம் இட சனியால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து விடுதலை உண்டாகும். நெருக்கடி விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப்.26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவர். தொழிலில் தடைகளையும் எதிர்பார்த்த வருமானத்தில். இழுபறியையும் உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை ஏற்படுத்துவர். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். ஏப்.26, 2025க்கு பிறகு 1ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவும் பாக்ய ஸ்தான கேதுவும் நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலையை உண்டாக்குவர். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவும், 8ம் இட கேதுவும் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் மந்தம், வீண் அலைச்சல், சிலருக்கு தொழிலை மாற்றும் நிலை, உடல் பாதிப்பு, பண வரவில் தடை, வீண் சங்கடம், எதிர்பாராத விபத்துகளை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, 2024 வரை 5ம் ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 6ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 7ம் ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குருபகவான். 5,6 ம் ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் போது வாழ்வில் முன்னேற்றம், பொன் பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் தொடங்கும் முயற்சி, பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் என்ற நிலையையும், சமுதாயத்தில் அந்தஸ்தையும் வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1, 2024 - மே 13, 2025 வரையிலும் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள்வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.

பொதுப்பலன்
சனி பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இல்லையென்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலை வாழ்க்கையை வளமாக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். வருமானத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமையை ஏற்படுத்தும். தொழிலில் ஏற்படும் தடைகளை விலக்கி வைக்கும். பணியில் இருந்த பிரச்னைகளை நீக்கி வைக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கையை உண்டாக்கும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும். உங்கள் முயற்சியின் காரணமாக லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
உங்கள் தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அதற்காக ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். மேற்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
உடல் நிலையில் சில பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதி சற்று குறையும். யோகா, தியானத்தால் தீர்வு காண முடியும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறைகளாலும் நிவாரணம் உண்டாகும்.

குடும்பம்
சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்; சிதம்பரம் நடராஜரை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும். நிம்மதி கிடைக்கும்.

திருவோணம்; பேச்சில் கவனம்

மனக்காரகன், மாதுர்காரகன் எனக் கூறப்படும் சந்திரபகவான். ஆயுள், கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச. 20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ஏழரைச் சனியின் பாத சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.

உங்கள் ஜென்ம ராசிக்கும், 2ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திற்கும் சனிபகவானே அதிபதியாகிறார் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவரின் கர்ம வினைக்கேற்ப வழங்கிட வேண்டியவராகிறார். இப்போது சஞ்சரிக்க உள்ள 2ம் இடமும் சனி பகவானின் சஞ்சாரத்திற்கு சாதகமான இடம் அல்ல என்றாலும், இதற்கு முன்பிருந்த சங்கடமான பலன் இனி உண்டாகாது. இக்காலம் ஏழரைச் சனியின் கடைசி காலக்கட்டம் என்பதால் முன்புபோல் நெருக்கடிகளை உங்களுக்கு சனிபகவான் வழங்க மாட்டார். இருந்தாலும் 2ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற போது குடும்பத்தில் பிரச்னைகள் தலையெடுக்கும். பேச்சில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பொருள் களவு போகும். பணஇழப்பு ஏற்படும் என்பதெல்லாம் பொதுவான விதி. இந்த நேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும், உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையும், நடைபெற்றுவரும் தசா புத்தியும் இந்த சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். சனிபகவானும் இதுவரை அவர் வழங்கிய சங்கடங்களுக்கு ஆறுதல் புரிவது போல் நற்பலன்களை இக்காலத்தில் தருவார்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலைகளிலும் சனிபகவானால் உண்டாகும் சங்கடமான பலன்களில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். விரோதிகளை வெற்றி கொள்ளும் நிலை உண்டாகும். ஏப். 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் செயலில் தடுமாற்றம் உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். உடல்நிலை ஒரு நேரம் இருப்பது போல் மறு நேரம் இல்லாமல் போகும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மனதில் தேவையில்லாத ஆசைகள் உருவாகும். அதை நோக்கி நடை போடுவீர்கள். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சந்தோஷத்திற்குள் மூழ்குவீர்கள். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவர். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். தாயாரின் உடல்நிலையில் நன்மை உண்டாகும். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். மே 1, 2024 - மே 13, 2025 ல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும். பட்டம், பதவி என்ற உங்கள் ஆசை பூர்த்தியாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மே 14, 2025 முதல் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். தொழிலில் எதிர்ப்பு உண்டாகும். போட்டியாளர்கள் அதிகரிப்பர். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். வம்பு வழக்கு என்ற நிலைக்கு ஆளாவீர்கள்.

பொதுப்பலன்
சனி பகவான் 2ம் இடத்தில் சஞ்சரித்தாலும் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் வழங்கிய சங்கடப் பலன்களை இப்போது வழங்க மாட்டார். மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் பெருமளவில் நன்மையே அடைவீர்கள். விருப்பம் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் கவனமாக செயல்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிகாரம் அந்தஸ்து என்ற நிலை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

தொழில்
தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். தொழிலை விரிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங் போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும். விவசாயம் செழிப்படையும். தகவல் தொடர்பு சாதனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற மரியாதை இல்லை என்ற நிலை இனி மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி ஏற்படும். அரசு பணியில் இருப்பவர்கள் பழைய பிரச்னைகள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் உண்டாகும்.

பெண்கள்
இக்காலத்தில் செயல்களில் கவனம் வேண்டும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நன்மையாக இருக்கும். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக அதிகமாக பாடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும். தடைபட்ட திருமணம் கைகூடும். சிலருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும்.

கல்வி
இக்காலத்தில் படிப்பில் இருந்து கவனம் சிதறும். அதிக முயற்சி எடுத்து படிப்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை இக்காலத்தில் மிகவும் அவசியம். தேர்வு காலம் வரை நட்பு, பொழுதுபோக்கு போன்றவற்றை ஒத்தி வைப்பதால் மேற்படிப்பு குறித்த கனவு நிறைவேறும்.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகத் தொடங்கும். உணவு செரிமானம், அல்சர், வீசிங் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் சனி பகவானின் பார்வை 8 ம் இடத்தின் மீது பதிவதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும் எச்சரிக்கையாக இருப்பதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் விலகும். விருப்பங்கள் நிறைவேறும். வருமானத்திற்கான உங்கள் முயற்சி வெற்றி பெறும். ஆடம்பரச் செலவுகளையெல்லாம் குறைத்து அத்தியாவசிய செலவுகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள். புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது, பொன், பொருள் வாங்குவது என்று குடும்பத்தின் நலனுக்காக ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். அதனால் பணத்தேவை அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தின் மீதான சனி பகவானின் பார்வையால் எதிர்பார்த்த பணவரவும் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் இக்காலத்தில் மிகப்பெரிய யோகம் ஏற்படும்.

பரிகாரம் ; சனீஸ்வரர், துர்கை, ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்து வழிபட சங்கடம் அனைத்தும் தீரும்.
அவிட்டம்; முயற்சி தள்ளிப்போகும்

தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனிபகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.

செவ்வாய், சனியின் அம்சத்தில் நீங்கள் பிறந்தாலும் கோச்சார ரீதியாக சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார். அவிட்டம் 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாகவும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சிகளில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் ஏதேனும் சங்கடம், எதிர்பாராத விபத்து, வருமானத்தில் தடை, பணம் பலவழிகளிலும் பறந்தோடும் என்பது பொதுவான விதி. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினர்களால் சங்கடம், வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை, வீண்சங்கடங்கள், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை. வருமானத்தில் தடைகளை உண்டாக்குவார். இவையெல்லாம் சனிபகவான் நேர்கதியில் சஞ்சரிக்கும் காலத்திற்குரிய பொதுப் பலன்கள்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், சனி அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சங்கடங்களில் இருந்து விடுதலையை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்ள முடியும். குடும்பம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். தொடர்ந்து வந்த சங்கடங்களில் இருந்து விடுதலையும், எதிர்பார்த்த வரவும் உண்டாகும். ஏப்.26, 2025 க்கு பிறகு இந்த நிலை மாறும். சங்கடமான நிலை தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு ஏப்.26, 2025 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும். உடல்நிலை, பணியில் பிரச்னைகள் ஏற்படும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வாழ வேண்டிய நிலையும், குடும்பத்தில் நெருக்கடியும் தோன்றும். ஏப்.26, 2025க்கு பிறகும் எதிர்மறையான பலன்களே ஏற்படும். தொழிலில் நெருக்கடி. பணியில் பிரச்னை. குடும்பத்தில் சங்கடம், எதிர்பாலினரால் அவமானம், வீண்பழி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, 2024 வரை சுக ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 5ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான், 5ம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே14, 2025 வரை குரு பகவானால் நன்மை வழங்க இயலாது என்றாலும், அதன் பிறகு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், எல்லாவித நெருக்கடிகளையும் விலக்கி வைப்பார். பணவரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகள், வம்பு வழக்குகள் என்பதிலிருந்து சாதகமான நிலையை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.

பொதுப்பலன்
அவிட்டம் 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின் சஞ்சாரம் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும் என்பதால் இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இக்காலத்தில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலிலும் போட்டி அதிகரிக்கும். மே 1, 2025க்கு பிறகு புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

பணியாளர்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். மே 1, 2024 முதல் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நன்மை அதிகரிக்கும்.

பெண்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிகவும் அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

கல்வி
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புண்டு. படிப்பில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வில் வெற்றிபெற முடியும்.

உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன், வாகன பயணத்தில் சில சங்கடங்களும் விஷ ஜந்துக்களால் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் அவசியம்.

குடும்பம்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

பரிகாரம்; காளத்தீஸ்வரர், குல தெய்வத்தை தினமும் வழிபட்டு வர சங்கடங்கள் மறையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement