தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும்
இக்கோவிலில் நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பு பெற்றது.
தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது 3வது பெரிய தேராகவும் திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். 28 அடி உயரம், 40 அடி அகலமும் இருக்கும் தேரின். மொத்த எடை 500 டன் ஆகும். இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும். ஆண்டுதோறும் சாரங்கபாணி இக்கோவிலில் உள்ள இரண்டு தேரில், சித்திரை மாதம் சித்திரைத் தேரோட்டமும், தை மாதம் தைத் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்தாண்டு தேரில் உள்ள 7 நிலைகளில் 3 நிலைகளில் உள்ள பலகைகள் சேதமடைந்தது. இதனால் கடந்த ஆண்டு சித்திரை பெருவிழாவில் சித்திரை தேரோட்டம் இல்லாமல் தைப்பொங்கல் தேரோட்டம் நடைபெற்றது. பிறகு, தற்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நிதியிலிருந்து சுமார் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர் மராமத்து பணிகள் சரி செய்யப்பட்டு தற்போது சித்திரை தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.