மூணாறு: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்த பழநி, சபரிமலை இடையே ரோடு திட்டம் செயல்படுத்தப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயில், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழநி தண்டாயுதபாணி கோயில் ஆகிய வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் ரோடு அமைக்க கோரிக்கை எழுந்தது. அதனை உறுதிபடுத்தும் வகையில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணியினை துவக்கி வைப்பதற்கு 2017 செப்., மூணாறுக்கு வந்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி பழநி– சபரிமலை இடையே ரோடு அமைக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்களின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டம் தொடர் நடவடிக்கை இல்லை.
இந்த ரோடு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தற்போதுள்ள மூணாறு- உடுமலைபேட்டை ரோடு வழியாக கடந்து செல்லும். அந்த வழித்தடத்தில் பல்வேறு காடு உள்ளபோதும், ஆனமலை புலிகள் காப்பகம், சின்னார் வனஉயிரின சரணாலயம், மறையூர் சந்தன மர காடு ஆகியவை மிகவும் முக்கியமாவை. அந்த வழியில் ரோடு அமைப்பதற்கான சாத்தியகூறுகள் மிகவும் குறைவு என்பதால் ரோடு திட்டம் செயல்படுத்த இயலாது என கருத்துகள் நிலவுகிறது. அதனை முறியடிக்கும் வகையில் டில்லி, டேராடூன் இடையே 213 கி.மீ., தூரம் அமைக்கப்பட்ட விரைவு சாலையில், உத்தரபிரதேசத்தின் ஷிவாலிக் வன சரகத்தில் இருந்து உத்தரகண்ட் ராஜாஜி புலிகள் சரணாலயம் வரை 18 கி.மீ., தொலைவுக்கு உயர் மட்ட மேம்பால சாலை அமைக்கப்பட்டு, சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் மூலம் போக்கு வரத்து நெரிசல் குறைந்து, மனித, வனவிலங்கு மோதல் தவிர்த்து, வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாட முடிகிறது. அது போன்ற தொழில் நுட்பத்தில் ஆனமலை புலிகள் காப்பகம், சின்னார் வன உயிரின சரணாலயம் ஆகிய பகுதிகளில் உயர் மட்ட மேம்பாலம் சாலை அமைத்து பழநி, சபரிமலை இடையே ரோடு அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்தது. மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் மறையூரில் இருந்து சின்னார் வனவிலங்கு சரணாலயம் இடையே அடர்ந்த வனத்தினுள் 18 கி.மீ., தூரம், சின்னாரில் இருந்து ஆனமலை புலிகள் காப்பகத்தில் 10 கி.மீ., தூரம் ரோடு கடந்து செல்கிறது குறிப்பிடதக்கது.