மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம்,கமலம்,குதிரை,யானை,ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இன்று கொடியேற்ற விழாவை முன்னிட்டு அதிகாலை ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கொடி மரத்திற்கு முன்பாக உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்களை வளர்த்து பூஜைகளை செய்த பிறகு கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கொடிமரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் தயிர் இளநீர் திரவியம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்களை செய்த பிறகு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி காலை 10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள் நடைபெற உள்ளது. மறுநாள் 29ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே.1ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள்,பொதுமக்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.