பழநி முருகன் கோயிலில் பெய்த மழையால் யானை பாதை சேதம்



பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மழைநீர் படிப்பாதை, யானை பாதையில் பெருக்கெடுத்து ஓடியதில் யானை பாதை சேதமடைந்தது.


பழநி முருகன் கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவை உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து பழநி முருகன் கோயிலுக்கு ஒரு வழி பாதையாக செல்வர். கோயிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதை இறங்கி ஒருவழி பாதையாக வருவர். நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழை நீர் படிப்பாதையில் அருவி போல் வழிந்து ஓடியது. அதேபோல் யானை பாதையிலும் மழை நீர் ஓடியது. வள்ளி சுனை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள யானை பாதையில் சேதம் ஏற்பட்டது. நேற்று சித்ரா பவுர்ணமி, தொழிலாளர் தின விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையில் அனுமதிக்கப்பட்டு பாதையின் நடுவே உள்ள இடும்பன் கோயில் பகுதியில் படிப்பாதை வழியாக முருகன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். படிப்பாதை வழியில் பக்தர்கள் இறங்கி வருவதால் இடையூறு ஏற்படாமல் இருக்க யானை பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தி பக்தர்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டது. சேதமடைந்த பாதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் முறையாக வெளியேறும் வகையில் யானை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழை காலங்களில் பாதை சேதமடைவது தவிர்க்கப்படும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்