மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாதம் நடக்க உள்ள பிரம்மோத்சவ விழா குறித்து, அறங்காவலர் குழு தலைவர் குமார் தலைமையில் நேற்று, பொதுக்கூட்டம் நடந்தது. மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மூலவர் சன்னதியில் ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து வரும் ஆனி மாதத்தில், வருடாந்திர பிரம்மோத்சவ விழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி கோவில் மண்டபத்தில், அறங்காவலர் குழு தலைவர் குமார் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பெரிய தேர் சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனி பிரமோத்சவ விழாவிற்கு முன், தேர் வெள்ளோட்டம் மற்றும் பிரமோத்சவ விழாவுக்கான பந்தக்கால் வரும் 18ஆம் தேதி நடத்தவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிகழ்வில், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோவில் அர்ச்சகர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.