பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவெள்ளவாயல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழர் காலத்தில் கட்டப்பட்ட சாந்தநாயகி சமேத திருவெள்ளீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருந்தது.
பக்தர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, மூன்று ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடந்த, 15ம் தேதி கிராம தேவதை வழிபாடு விழா தொடங்கியது. அதன்பின், மஹா கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம், யாத்ரா ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை 6:45 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் கோவிலின் அனைத்து விமானங்களுக்கும், திருவெள்ளீஸ்வரர் மற்றும் பரிவாரங்களுக்கும் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, மஹாபிஷேகம், திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.